உள் நுழையும் விழிகளுக்கு

படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்..அது படைப்பாளிக்கு தாய்பால் மாதிரி.

Followers

About Me

My photo
வாழ்வின் பல தளங்களில்..பன்முக அனுபவங்களில் பூக்களையும்..புண்களையும்..பரிசாக பெற்றவன். எழுத்தும்..கலையும்..மூச்சு.பத்திரிக்கை நிருபராக துவங்கி..திரைப்பட இயக்குனராக..பயணப்பட்டவன். பயணம் இன்னும் தொடர்கிறது. "நினைப்பதெல்லாம் நடந்துவிடும்"-என்கிற தன்முன்னேற்ற நூல் என் கன்னி முயற்சி. தொலைகாட்சிகளில்..தொடர்கள்..,நிகழ்ச்சிகள்..,குறும்படங்கள்..உரைநிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக.., தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக..இன்னும் தேடல் தொடர்கிறது. உங்களோடு என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள்..நம் உயிராம் தமிழோடு பிணைத்துக்கொள்ளுங்கள்.

Wednesday, April 22, 2009

நினைப்பதெல்லாம் நடந்துவிடும் -பகுதி 5 மனதோடு உரையாடலாம்




"ஏ..மனமே உன்னோடு ஹாயாக சில நிமடங்கள் தனிப்பட்ட முறையில் பேச வேண்டும்.."
"நான் ரொம்ப பிஸி. நிறைய வேலைகளிருக்கிறது. பரவாயில்லை..நாம் சிறிது நேரம் பேசுவோம் எனக்கும் போரடிக்கிறது.."
"என்னது மனதுக்கே போர் அடிக்கிறதா..?"
"இதென்ன அண்ணாமலைக்கே பாலா என்கிற மாதிரி..? மனதுக்குதான் போர் அடிக்கும்ம்.."
"போரடித்தால் என்ன செய்வாய்,,,?"
"உடலை திமர வைப்பேன். மனித முகங்கள் தாக்க வருகிற கரடியாகத் தோணும். சில உதடுகளில் நிக்கோடின் அரிப்பைத் தூண்டுவேன். சில நுரையீரல்களுக்கு 'டாஸ்மாக்' வாசனை தேவைப்படும்.சிலருக்கு புத்தகம். சிலருக்கு டி.வி., சிலருக்கு ஹிஹி..ஹி..,சிலருக்கு தூக்க மாத்திரை..இப்படி நிறைய இருக்கிறது.."
"மனமே நீ ஒரு மாபெரும் ஆற்றல். மனிதனுக்கு வாய்த்த ஆறாவது அறிவு. ஒவ்வொரு அறிவும் தாம் செயல்பட ஒரு ஊடகம் வைத்திருப்பது போல். சிந்திக்கும் பகுத்தறிவான நீ, வலது மூளையும் இடது மூளையும் கட்டப்பட்ட கபாலத்தேரின் உச்சியில் சாரதியாய் உட்கார்ந்திருக்கிறாய். எல்லாம் சரி..அங்கு உட்கார்ந்து என்ன செய்கிறாய்..?"
"வியாபாரம் செய்கிறேன்"
"என்ன வியாபாரம்"
"எண்ண..வியாபாரம். என் கடை எண்ணக்கடை. உடல் செயல்வடிவமானது.உயிர் ஒளிவடிவமானது. மனமாகிய நானோ எண்ண வடிவமானவன். என் பணி கண்டதையும் எண்ணிக்கிடப்பதே."
"உன் வாடிக்கையாளர்கள் யார்..?"
"உயிருள்ள உடல் என்னுடைய main dealer. புலன்கள் sub-dealer. செல்கள் என் நுகர்வோர்.."
"எண்ணங்களை வாங்கி அவர்கள் என்ன செய்கிறார்கள்..?"
"உணர்ந்து அனுபவிக்கிறார்கள்.செயலுக்குள் ஈடுபடுத்திப் பொருளாய் மாற்றுகிறார்கள். புதிய கொள்கையையோ
கருத்தையோ உருவாக்குகிறார்கள், மொழியாகப் பேசுகிறார்கள்.."
"இதில் உனக்கென்ன லாபம்..?"
"எனக்கு கிடைக்கும் திருப்திதான் லாபம். திருப்தி கிடைக்காவிட்டால் நஷ்டம்.."
"லாபம் வந்தால் என்ன செய்வாய்..? நஷ்டம் வந்தால் என்ன செய்வாய்..?"
"அதையும் எண்ணங்களாகவே மாற்றிவிடுவேன். லாபம் எனில் ஆணவச்சாயம் பூசி அகங்காரமாயும், நட்டம் எனில் சோகச்சாயம் பூசி விரக்தியான எண்ணங்களாக்கிவிடுவேன்.நான தூண்டில் போட்டு அதில் நானே சிக்கிக்கொள்கிறேன். இதுதான் என் இயல்பு,,"
"மாற்றிக்கொள்ள முடியாதா..?"
"அதைப்பற்றி கவலைப்பட வேண்டியது நீங்கள்தான். காரணம்..என்னை எதுவாக நினைக்கிறீர்களோ..நான் அதுவாகவே மாறிவிடுவேன். நினைத்தவர்களையும் மாற்றிவிடுவேன்."
"நல்லதே விளைய நாங்கள் என்ன செய்ய வேண்டும்,..?"
"நல்லதை நினை ம்னமே,."

"நல்லதை நினைப்பது உன் வேலை இல்லையா.."
""நல்லைவைகள் மிக மிக உயரத்தில் இருக்கின்றன. அவ்விடத்திற்கு சென்று நான் கொள்முதல் செய்துவரும் வரை புலன்கள் பொறுப்பது இல்லை. அதனால்தான் தாழ்வான நிலையில் உள்ள தரமற்ற எண்ணக்களைத் தருகிறேன்."
"தரமற்ற எண்ணங்கள் என்றால்..?"
"உயரத்தில் உள்ளவை உன்னதங்கள்.என் கைக்கெட்டும் தூரத்தில் இருப்பவையோ..கோபம்,எரிச்சல்,சலிப்பு,சோம்பல், விரக்தி, தற்கொலை.."
"அய்யோ.."
"என்ன அய்யோ? தலைவர்களூக்காக தீ குளித்தவர்கள்,நாக்கை வெட்டி உண்டியலில் போட்டவர்கள், தீர்க்க முடியாத கடனை தண்டவாளத்தில் அடைத்தவர்கள், நினைத்த காதல் நிறைவேறாமல் மலையிலிருந்து குதித்தவர்கள்,இப்படி..இப்படி..என்னை உயரத்துக்கு எடுத்து செல்லாதவர்கள் ஏராளம்.."
"உன்னால் இதை எல்லாம் தடுக்க முடியாதா..?"
""முடியும். தவமிருந்தால்தானே வரம் கிடைக்கும்..இல்லையெனில் சாபம்தான். இயல்பாகவே நான் ஒரு குப்பைத் தொட்டி.முயற்சி செய்யாமலே என்னிடம் குப்பைகள் குவியும். முயற்சியின்றி சேர்ந்தால்தான் குப்பை. முயற்சி செய்தால் மட்டுமே தூய்மை.அம்முயற்சிக்கு எனக்கு தூண்டுதல் வேண்டும்.."
"எதை வைத்துத் தூண்ட..?"
"விழிப்புணர்வை வைத்து.."
"இதென்ன புது உணர்வு.."
"உம் போன்ற ஆட்களுக்கு இது புதிதாகத்தான் இருக்கும். சரி எனக்கு நேரமாகிறது நான் வருகிறேன்.."
"மனமே எங்கே போகிறாய்..?"
"ஊர் சுற்றத்தான்..தெரியாமல் விழிப்புணர்வு இல்லாத ஒருவனிடம் சிக்கிக்கொண்டேன். கண்டதையும் நினைக்க வேண்டும்..நான்..வருகிறேன்..பை.."

"எண்ணாத எண்ணமெல்லாம்
எண்ணி எண்ணி ஏழை நெஞ்சம்
புண்ணாக செய்தது இனிப்
போதும் பராபரமே.."
என்று விழிப்புணர்வை வேண்டினார் தாயுமானவர்.

"ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைஸ் சுட்டறுத்து
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்..?"
விழிப்பின் உச்சியில் கிட்டும் சுகத்திற்காக இப்படி ஏங்கினார் பத்திரகிரியார்.

விழிப்புணர்வு கூடக்கூட யாருடைய மனது படிபடிபயாக திருந்தி அமைகிறதோ , அம்மனிதனே மெய்வாழ்வு பெறுகிறான். மனோலயப்பட்டால் மனிதன். மனோ நாசம் உற்றால் ஞானி. மானுடப்பிறவி எடுத்ததன் நோக்கமே ஒருவன் தன்னை குணசீலனாக்கிக்கொள்ளவே.நல்லெண்ணமும் , நற்செயலும், நன்மொழியும் மனிதனை குணவானாக்கும்.
"நானேதும் அறியாமே என்னுள் வந்து
நல்லனவும் தீயனவும் காட்ட நின்றாய்.." என்று நெகிழ்ந்தார் அப்பர் பெருமான்.

சாதாரணமாக வாழும் வாழ்கை என்பது, உணர்தல், பார்த்தல், சுவைத்தல், மூச்சுவிடுதல், கேட்டல் எனலாம்.
விழித்துணர்ந்து வாழ்தல் என்பது..
உடலும் மனமும் ஒன்றி உற்றறிதல்,நாவும் மனமும் பின்னி உணவை சுவைத்தல்,நாசியின் காற்றோடே மனமும் ஏறி இறங்குதல்,கண்களோடு மனம் கலந்து காணல்,செவிகளில் ம்னம் இணையக் கேட்டல்,மனம் மனமாயிருந்து சிந்தித்தல்.

விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்.நாமும் பிழைத்துக்கொள்வோம். விழிப்பே உயர்வு. விழிப்புடன் மனதை சிக்கெனப் பிடித்துக்கொண்டால் மட்டுமே உயர்வு.

விழிப்புணர்வு என்றால் என்ன....?

Monday, April 20, 2009

நினைப்பதெல்லாம் நடந்துவிடும் -பகுதி 4




"தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்"
"தலையே போனாலும் சரி இதை நான் செயாம விட மாட்டேன்.."
"என்ன் செய்துடுவான்..தலையே எடுத்துடுவானோ..?"
"தலைய வச்சாவது சொன்ன நேரத்துல நான் என் கடனை அடைச்சுடுவேன்.."
"தலைக்கு வந்தது தலைப்பாகையோட் போச்சு.."
இப்படி..இப்படி மனிதர்களிடம் தலைப்படும் பாடு சொல்லிமாளாது.தலைக்கு ஏன் இந்த முக்க்யியத்துவம்..?அப்படி இந்த தலையில் என்னதான் இருக்கிறது..?

கவிழ்த்துவைத்த மண்சட்டியைபோல் கபாலம். அதில் வலது இடதாய் 700 கிராமுக்கு ஒன்னரைகிலோ மூளை. பிமண்டியயில் முகுளம்.சோள்க்கொல்லை பொம்மையில் குத்தி வைத்ததுபோல் முகுளத்தை இணைக்கும் தண்டுவட் முனை. அச்சில்வார்த்த கேள்விக்குறிகளாய் ரெண்டு செவிகள்.மு மண்டைக்கு நேராக நூறடி ரோடு மாதிரி பெரு நெற்றி.அதன் கீழாக இரு துளைகளில் கோழிமுட்டையை துருத்தி வைத்த மாதிரி இரு கண்கள்.கண்களின் நடுநாயகமாய் சார்த்திவைத்த ஏணி மாதிரி ஒரு மூக்கு.நாசிகோயிலுக்கு பீடம் வைத்த மாதிரி வாய் அதிலொரு நாக்கு.சொல்லிகொண்டே போனால் தலையில் வேறென்ன இருக்கிறது..?
"எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம்"என்பது லேசான வார்த்தைகள் அல்ல.

உயிர் நடத்தும் ஜனநாயக ஆட்சிக்கு தலைமைச் செயலகம் தலையே.புலன்கள் என்னும் அமைச்சர்களஅமர்ந்திருக்கும் சட்டமன்றம்தான் நம் தலை. சிரசில் உட்கார்ந்துகொண்டு அவர்கள் அப்படி என்னதான் செய்கிறார்கள்..?உடல்முழுதும் இருக்கும் எண்ணற்ற தொகுதிகளுக்கன நிர்வாக கட்டளையை மூளையிடமிரும்து நரம்புகள் வழியாய் எடுத்துப்போகிறார்கள். உயிரின் நிதியகமான குருதி கிடங்கு இதயத்திலிருந்து நிதியை நாலங்கள் வழியாக நுரைக்க நுரைக்க உடலின் உள்லாட்சி அமைப்புக்கும் இன்னும் மூலை முடுக்குக்கெல்லாம் எடுத்துப்போகிறார்கள்.குடிமக்களான ஒவ்வொரு செல்லும் சுகமாய் வாழ, வயிறான் தானியக் கிடங்கில் சேமிப்பை கண்காணிக்கிறார்கள். 

இப்படி உடல் முழுதிற்கும் தேவையான சட்ட திட்டங்கள் தீட்டப்பட்டு செயலாக்கப்படும் செயிண்ட்ஜார்ஜ் கோட்டைதான் நம் தலை.உயிராற்றல் எனப்படும் மின்சார உதவியோடு இயங்கும் அனைத்து புலன்களின் மின் இணைப்புகளின் மெயின் போர்ட் மாட்டப்பட்டிருக்கும் இடமே தலை.கணினி மொழியில் சொல்வதானால் கணினியின் செயல் வேகத்தை தீர்மானிக்கும் மதர் போர்ட் அடங்கிய CPU தான் நம் தலை.இப்படிப்பட்ட அரசாங்கத்திற்கு முதல்வராய் இருந்து ஆட்சி செய்பவர்தான் திருவாளர் மனம்.

இவர் இயற்றும் சட்ட திட்டங்களை நிறைவேற்றுவதில் மன்றத்தில் சின்னதாய் சிக்கலும் உண்டு.அரசியல் கட்சிகள் போலவே right left ஆக அமர்ந்திருக்கும் வலது மூளை ஆளுங்கட்சி என்றால் இடது மூளை எதிர்கட்சி.
வலது - நெருப்பு என்று சொன்னால் போதும் 
இடது - அது சுடுமே என்பார்..
வலது -பர்னால் தடவிக்கொள்ளலாம் என்றால் 
இடது - அது வீண் செலவு என்பார்.

இரண்டு பக்க மூளைக்கும் ஊடாடித்தான் நம் மெய் தேசத்தின் நிரந்தர முதல்வராகிய மனம் ஆட்சி செய்தாக வேண்டும்.
சரி...
முதல்வரின் இருக்கை எங்கே இருக்கிறது.....?
ஏற்கனவே பார்த்தோம் புலான, உடல் உறுப்பாக இல்லாத மனதுக்கு உடலுக்குள் இடம் இல்லை என்று. மன முதல்வர் ஆற்றல் அலையாக இருப்பதால் வெளியேதான் உட்கார வைத்தாகவேண்டும்.உள்ளுறுப்புகள் அனைத்தும் குறிப்பிட்ட பணிகளை திரும்ப திரும்ப செய்பவை. மனம் அப்படியல்ல. அது அந்த உள்ளுறுப்புகளையே மூளை வழியாக இயக்கும் ரிமோட்சென்ஸ் மாதிரி.அந்த ரிமோட் வசதியாக உட்கார்ந்து தன் பணியை செய்ய இய்றகை தேர்ந்தெடுத்த இட்மதான் உச்சந்தலை.ஆண்டெனா மாதிரி கொத்து முடிகள் தூக்கிகொண்டிருக்குமே அந்த தலை உச்சியில்தான் சுருள்வில் இருக்கையிலே கண்ணுக்கு தெரியாத அலை ஆற்றலாக நம் மனம் உட்கார்ந்திருக்கிறது.

கருவறையில் சிசு குடியிருக்கும் முந்நூறு நாட்களில் உயிராற்றல் தொப்புள் கொடி வழியே தாயிடமிருந்து அனுப்பப்படுகிறது. தொப்புள் கொடி அறுபட்டதும் அதன் அழியே முதல் காற்று உடலுள் ஜீவனை இழுத்துப்போய் நெற்றியில் வாய்ப்பதாக ஞானியர் கூறுவார்கள்.அந்த ஜீவஜோதியின் பிரகாசம் அணையும் வரை உச்சந்தலை மனம் அதன் ஒளியை உடலுக்கு உள்ளும் வெளியும் எண்ணமாக செயலாக பரவச்செய்கிறது. முழு உடலும் கருவுக்குள் வளர்ந்தாலும் குழந்தைக்கு தேவையான மனதை பிரசவம் நிகழந்த பிறகே இய்ற்கைமுழுதாக வடிவமைக்கிறது.

வரைபடத் தாளில் இரண்டு அச்சுகள் வெட்டிக்கொண்டால் நான்கு கால் பகுதிகள் உருவாகும் அல்லவா..?அதை போல கபால எலும்புகள் இணையும் ஓர் ஆதிப்புள்ளியில் தோல்மட்டும் மூடிய நிலையில் உச்சிக்குழி என ஒன்று துடிக்கும். அந்த உச்சிகுழி வழியேதான் வாழ்கையை எதிர்கொள்ளத் தேவையான் இயங்குப் பதிவுகளை இயற்கை இறக்கி வைக்கிறது."குடுக்கிற தெய்வம் கூரையை பிச்சிக்கிட்டு குடுக்கும்" என்ற சொலவடையில் வரும் கூரை நம் தலைதான், தெய்வம் பிய்க்கும் இடமே உச்சிக்குழி.உடனே உங்கள் தலையில் அப்படியொரு குழியை நீங்கள் தேடுவது தெரிகிறது. முழு மனமும் உருவான சில மாதங்களிலேயே இயற்கை அதை சீல் செய்து அடைத்துவிடும். 

நம் மனதில் ஏற்கனவே programme  load செய்தாகிவிட்டது. அதுவும் மிக நன்றாகவே. கணீனியில் தொடர் பணி நிமித்தம் cpu சூடாகிவிடுவதுபோல் நம் தலையும் சூடாகி செயல்பாட்டில் பங்கம் வராதிருக்கவே நம் பாட்டிகள் உச்சந்தலையில் சூடு பறக்க எண்ணெய் தேய்க்கிறார்கள். எண்ணெய் முழுக்குப்போன்ற அனைத்துமே அனலடிக்கிற மனதுக்கு ஐஸ் வைக்கிற முயற்சியே.

தலை உச்சியில் தலைவனாக உட்கார்ந்திருகும் ஆறாவது அறிவின் அதிபதியான மனதின் அலைநீளத்தை பொறுத்தே நாம் பில்கேட்ஸ் ஆவதும் பிச்சைக்காரர்கள் ஆவதும்.நாளும் பொழுதும் ஒவ்வொரு நொடியும் தலைமேல் அலையாக இருக்கும் மனதைநாம் உணர்ந்துகொண்டே இருக்க வேண்டுமென்பதில் நம் முன்னோர்கள் அதிக கவனம் காட்டியிருப்பதற்கான அடையாளங்கள் நிறைய. அதிலொன்றுதான் கரகாட்டம். தலையில் ஏற்றிய கரகத்தை வைக்கப்பட்ட உச்சியிலிருந்து கீழே விழுந்துவிடாமல் உடலின் ஒவொரு ஊசி முனையிலும் கரகத்தின் நர்த்தனம்.மனதின் அதியற்புதத்தை உலகுக்கு எடுத்து சொல்லும் தமிழின் தன்னிகரில்லா தமிழ்கலை. நம் கலாச்சாரத்தின் ஒவொரு கலையையும் இதே ரீதியில் ஆய்வுகுட்படுத்த வேண்டும்.

விளையாட்டக மட்டுமன்றி புராணப்படைப்புகளில் அடையாங்களாக மனம்,உடல், மற்றும் உயிர் பற்றிய நுட்பங்கள்தான் வைக்கப்பட்டிருக்கின்றன என கருத இடம் உள்ளது.வலது மற்றும் இடது மூளையோடு இணைந்து மனதின் ஆற்றல் முதுகு தண்டுவடம் வழியாக மனிதனுக்குள் இறங்கும் அற்புதமான வடிவம்..சிவபெருமானின் கையில் இருக்கும் திரிசூலம். மனம்  இருபக்கத்துக்கும் ஊடாடி சப்திக்கும் செயலை சித்தரிக்கும் உடுக்கை. ஒவ்வொரு மனிதனுன் முக்கண்கொண்ட சிவனே.இயேசுபெருமான் மரித்த சிலுவையைக்கூட இதே பார்வையில் பார்க்க பொருத்தமாகத்தான் இருக்கிறது. திரிசூல வளைவுகளை மடக்கி வைத்தால் சிலுவை. சிலுவையின் பக்கங்களை வளைத்தால் திரிசூலம். இஸ்லாமியமார்க்கத்தின் அடையாளமான பிறையின் இரு கூர்முனைகளும் மையத்து நட்சத்திரமும் இதே ரகசியத்தைதான் பறைசாற்றுகிறது.

"எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்..
அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு"

big minds are thinks alikes என்பார்கள். பேருண்மையை எல்லா ஞானியரும் இப்படித்தான் ஒரே மாதிரி சிந்தித்தார்கள்போலும்...அது சரி உங்களுக்கு என்ன சிந்தனை..?
உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது என்றா..?

வாருங்கள் அதை மனதிடமே 'பளிச்' என்று கேட்டுவிடுவோம்.

Thursday, April 16, 2009

நினைப்பதெல்லாம் நடந்துவிடும் .-பகுதி.3. மனம் எனும் மந்திரதேச




"மனமே முருகனின் மயில் வாகனம்" மோட்டார் சுந்தரம்பிள்ளைத் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் இது.
முருகன், குமரன்,ஆறுமுகன் என்றெல்லாம் அழக்கப்பெறும் ஆறாவது சமயத்துக்குரிய வழிபடுக் கடவுள். அறிவுக் கடவுள். முருகனின் வாகனம் மயில். அதாவது அறிவின் வாகனம் மனம்.
"ஏறு மயில் ஏறி வினை தீர்க்கும் முகம் ஒன்று" எனப் பாடினார் அருணகிரி நாதர். வினை தீர்க்க மயிலேறி முருகனா வருவான்..? அறிவானது மனதில் ஏறி வினை தீர்க்க வேண்டும் என்பதே மறைபொருள்.

மயில் ஒரு அசாதாரணப் பறவை.பஞ்சபூதங்களின் உள்ளுணர்வை தெள்ளென உணரக்கூடியது.ஆலாலகண்டனும் ஆடலுக்கு தகப்பனுமான நடராஜனின் பொன்னம்பலத்தை தன் தோகையில் காட்டி நிற்பது.மனமும் அப்படித்தான். போற்றும் விதத்தில் போற்றினால் நம் மனமும் பொன்னம்பலத்தைக் காட்டும். பஞ்சபூதங்களின் மேல் ஏறி நிற்கும். தோகை விரித்தாடும்.பல அதிசயங்களை நிகழ்த்தும்.மனம் பற்றிய அறிவு இல்லா நிலை மனமில்லா விலங்கு நிலைக்கு ஒப்பானது.

மனம் என்பது என்ன..?
மனம் ஒரு பொருளா..? பொருள் எனில் சடநிலையில் அதை உருவாக்கவும், வடிவம தரவும், தோற்றப்பொலிவை மேம்படுத்தவும் மனிதனால் இயலக்கூடும். கடைகளில்கூட ஐ.எஸ்.ஐ முத்திரை குத்திய மனதை ஒரு அரை கிலோ கட்டி தர சொல்லி வாங்கிவிடலாம்.சந்தைக் கடையில் வாங்கும் பொருளல்ல மனம்.

அப்படியெனில் மனம் ஒரு புலனா..?
மனிதனுக்கு உடலும், உடல் சார்ந்த இயக்கத்திற்கு கட்டுப்படும் ஐம்புலன்கள் உண்டு. மெய்,வாய்,கண்,காது,மூக்கு,என்பவையே அவைகள். பஞ்சபூதங்களின் வார்ப்பாக மனிதன் ஐந்து புலன்களை மட்டுமே பெற்றிருக்கிறான்.அவ்விந்தையும் எழுச்சியோடு அழுத்தி எழுந்ததே மனமாகும்.தொண்டர்களை தண்டரை வைத்தே வழி நடத்துவதில் ஞாயம் இல்லை என்பதால் இயற்கை மனதை புலனாகவும் படைக்கவில்லை.

மனம் மனித் உடலின் உள்ளுறுப்பா..?
உடல் பெட்டிக்குள் பூட்டி வைத்த உள் உறுப்புகள் அமைய பெற்றவன் மனிதன். விலா எலும்பு சிறைக்குள்ளும், வயிற்று பானைக்குள்ளூம், இருதயம்,நுரையீரல்,மண்ணீரல்,கணையம், சிறுநீரகம், சிறுகுடல், பெருகுடல், உணவுப்பை என தானியங்கி சாதங்களாய் பல உறுப்புகளை கூட்டாக கட்டமைத்து உள்ளது.இது நாள்வரை எந்த மருத்துவரும் மனம் என்கிற உள்ளுறுப்பைக் கண்டதாய் சொன்னதில்லை.சொல்லவும் முடியாது.மனிதர்கள் பழக்கம் காரணமாக "என் மனசுக்குள் எதுவும் இல்லை"என்று நெஞ்சு பகுதியை காட்டி இதயம்தான் மனம் என்பார்கள்.

மனிதனை வடிவம் தந்து வார்க்கும் மனம் பொருளாக,புலனாக, உள் உறுப்பாக இல்லாத நிலையில் அதன் மூலம்தான் என்ன.?
ஒருவேளை மூளைதான் மனமோ..?வலது கைஅயி உயர்த்த வேண்டுமெனில் அதற்கான உத்தரவை இடது மூளையிடமிருந்து பெறப்படவேண்டும்.தராசு தட்டு போல் வலது இடதாய் பிரிந்து நிற்கும் மனித உடலை எதிரெதிராய் வலது மூளையும், இடது மூளையும் இயக்கிநிற்கிறது. உடல் இயங்க மூளை உத்தரவிட வேண்டும்.சரி. மூளைக்கு உத்தரவிடும் முதலாளி யார்..? பின் எதுதான் மனம்..?

ஒரு எளிமையான கதையை பார்ப்போம்..
காசு திருட ஒருவன் சிறிய உண்டியலில் கையை விட்டான். திரும்ப எடுக்க முடியவில்லை. மருத்துவர்கள் கையை வெட்டவேண்டியதுதான் என்றார்கள். திருடியவன் மிகவும் பயந்துபோனான். கையில் அந்த உண்டியல் செம்போடே போய் வரவேண்டியதாயிற்று. ஒரு நாள் அவனது மனைவி பக்கத்து கோவிலில் யாரோ ஒரு ஆன்ம ஞானி வந்திருப்பதை கேள்விப்பட்டு அவரிடம் தன் கணவனை அழைத்துப்போனாள். ஞானி முழுக் கதையையும் கேட்டு பின்.."இதோ பாரப்பா கைக்கும், செம்பிற்கும் சேதாரமில்லாமல் காப்பாற்ற ஒரு வழி உள்ளது. அந்த உபாயத்தை என்னால் சொல்ல மட்டுமே முடியும்..செய்ய வேண்டியது நீதான்" என்றார். திருடன் சம்மதித்தான்.
"காசுக்கு ஆசைப்பட்டுதானே கையை உள்ளே விட்டாய்..இப்போது அந்த காசு வேண்டாம்..காசு வேண்டாம்..வேண்டவே வேண்டாம்..என நினைத்து கையை வேகமாக உதறு..உன் கை வெளியே வந்துவிடும்" என்றார். அவனும் உதறினான். கை விடுபட்டது. 

இந்த கதையிலிருந்து மனம் என்பது என்ன என்பதை பற்றிய ஓரளவு முடிவுக்கு நம்மால் வரமுடியும். கையை விடுவிக்க ஞானி எந்தப் பொருளையும் பயன்படுத்தவில்லை. வார்த்தைகளை ஒரு கருத்தில் அமைத்துப் பேசினார். பேச்சு என்பது மொழி. மொழி என்பது ஓசை. ஓசை என்பது அதிர்வு. அதிர்வு என்பது காந்தம். காந்தம் என்பது ஆற்றல். ஆம் க்ண்ணுக்கு புலனாகாத ஆற்றல்தான் மனம். mind is nothing but an enrgy.  மனம் என்கிற ஆற்றல் மனித மூளையை ஊடகமாகக்கொண்டு செயல்படும் வான்காந்த ஆற்றல். மனித மூளையிமன் மேலாளர் மனமே. ஒட்டுமொத்த மனித கூட்டத்தின் எசமானன் மனமே.

மனம் என்கிற ஆற்றலுக்கும் மனிதனுக்கும் என்ன தொடர்பு..?
ஒவ்வொரு மனிதனின் உடல் மற்றும் புலன்களின் உள்முக குவிப்பாக அதிர்வோடு இயங்குவதே மனம். மனதின் வெளிமுக தொகுப்பாக இயங்குவதே உடல்.மனமும்,உடலும் இயங்க பாலமாக, சாட்சியாக., சக்தியாக இருப்பதே உயிர். மனம் சொல்வதை உயிர் மொழிபெயர்க்கும், உடல் செயல்பெயர்க்கும்.

சில சமயங்களில் உடலும், புலனும் சொல்வதை மனம் உள்ளுணரும். உடல்,கண்,காது, மூக்கு,வாய் இவைகளில் மனம் இறங்கி வேலை செய்யும். சிவந்து கோபம் கொப்புளிக்கும் கண்களில் உண்மையில் நாம் பார்ப்பது அனல் வீசும் மனத்தையே.தூங்கும் குழந்தையை தட்டிகொடுத்து மென்மையாய் வருடிவிடுவது உண்மையில் கைகளல்ல..தாயின் மனமே. உணர்வோடு புலன் வழி இற்ங்குபோது, புலன்களும், உறுப்புகளும் மன் மயமாகவே மாறிவிடுகிறது. சில தாயரோ..பிள்ளையை "ச்சீ போ சனியனே 'என விரட்டுவர். விரட்டிய கைகளில் வேலை செய்ததும் மனமே.

தாய் தன் பிள்ளையை வருடிகொடுத்தாளா..? விரட்டி அடித்தாளா..?என்பது பற்றி உயிருக்கு கவலை இல்லை. அது வெறும் சாட்சி.மனம் அழுத்தும் சுவிட்சுக்கு மின்சாரத்தை பாய்ச்சுவது மட்டுமே அதன் வேலை.

இது புலன்களில் மனம் இயங்கும்விதம்.சமயங்களில் மனதுக்குள் புலன்கள் இயங்குவதுண்டு.வெளி உடலை நகல் எடுத்தாற்போல் மனதிற்ககும் ஒரு உடல் உண்டு.அவ்வுடலில் உணர்வும் உண்டு.முதுகுக்கு பின்னால் நம்மைப் பற்றி பேசும் சிலரை சட்டென்று திரும்பி பார்க்கிறோமே மனதின் உள்ளுணர்வு தூண்டலே அது.மனதிற்கும் கண்கள் உண்டு. வெளிக்கண் காணா நிலையிலும் அகக்கண் தெளிவுறக் காணும் சக்தி படைத்தது.விசுவரூபம் எனும் இறைப்பேராற்றலை ஞானிகள் இந்த அகக்கண்ணால்தான் காண்கிறார்கள்.முக்காலத்தையும் தரிசிக்கிறார்கள். நம் மனக்கண்களோ ஐஸ்வர்யாராயையும், அஸினையும் பார்ப்பதில்தான் ஆளாய் பறக்கிறது. இது மனதின் குற்றமல்ல. மனக்குதிரையை இயக்க தெரியாதவர்களின் குற்றம்.

மனதிற்கு செவியும் உண்டு. அது மனச்செவி. எங்கும் ஆனந்த பேரொளியாய் இசைக்கும் விசுவநாதத்தை இச்செவியால்மட்டுமே கேட்க முடியும். மனதிற்கு வாய் உண்டு. அது மன வாய்.யாருக்கும் கேட்காமல் பேசும்.
ஔவை அழகாக சொல்லுவாள்.
"கற்கலாம் கேட்கலாம் கண்ணாரக் காணலாம் 
உற்றுடம்பால் ஆய உணர்வு.."-ஔவை குறள் (உள்ளுடம்பின் நிலைமை-1)

மனம் எனும் மந்திர ஆற்றலை மத்தாகக்கொண்டு வாழ்வெனும் பாற்கடலை கடைந்து அமிர்தம் பருகுவதில் மனிதனுக்கு தடை என்ன..?

எல்லாம் சரி...மனதின் முகவரி எது..? அதன் விஸிட்டிங் கார்டு இருந்தால்தானே அதைக் கண்டுபிடித்து அழைத்து வேலை வாங்க முடியும்.

மனமெனும் ஆற்றலின் இருப்பிடம் எது..?அதன் ரிஷிமூல ஊற்று எங்கிருந்து..?தங்கப்புதயலைத் தேடி மனிதர்கள் பய்ணித்த கதை நமக்கு தெரியும்.

வாருங்கள் நாம் மனதின் இருப்பிடத்தைத் தேடி செல்வோம்.....




Tuesday, April 14, 2009

நினைப்பதெல்லாம் நடந்துவிடும்-பகுதி.2. நாம் யார்..?


நாம் யார்..?
மனிதர்கள் என்று எவராலும் சொல்லிவிட முடியும்.
மனிதனைப் படைத்தவை பஞ்ச பூதங்கள் என்று ஏற்கபனவே பார்த்தோம்.சர்வ வல்லமை படைத்தவனாக, உலகையே ஆளக்கூடிய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் மனிதன் அந்நிலைக்கு எப்படி வந்தான்..?

"தேவன் தம்முடைய சாயலாக மனிதனை சிருஷ்டித்தார். அவனை தேவ சாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களை சிருஷ்டித்தார்."- ஆதியாகமம். அதிகாரம் :1 வசனம்:27

"மக்களே நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்களுடைய இறைவனை மட்டும் வணங்குங்கள். அதனால் நீங்கள் எல்லாவித ஆபத்துக்களிலிருந்தும் தவிர்த்துக்கொள்ளலாம்." -குர் ஆன் அதிகாரம்:2 (அல்பக்கரா)வசனம்:22

மனிதன் நேரடியாக கடவுளால் படைக்கப்பட்டான் என்று மதங்கள் முரசறைந்தன. "மனிதன் முழுதாக ஆண்டவனால் படைக்கப்படவில்லை, மண்ணின் செழுமைகள் ஒன்றுகூடி உண்டான உயிரணுக்களின் பரிணாம வளர்ச்சியே மனிதன். பூச்சியாய், புழுவாய், நத்தையாய், மீனாய், பறவையாய், மிருகமாய், குரங்காய் வளர்ந்து இறுதியில் அவற்றின் திருத்த உருவமாக மனிதன் தோன்றினான்" என்று சார்லஸ்டார்வின் மதங்களுக்கு எதிராய் நின்றார்.

"புல்லாகிப் பூடாய் புழுவாய் 
பல்விருகமாகிப் பறவையாய் பாம்பாகி 
கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய் 
வல் அசுரராகி முனிவராய் தேவராய்ச்
செல்லா அநின்ற இத்தாவரச் சங்கமத்துள் 
எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன்.."-சிவபுராணம், மாணிக்கவாசகர்.

வைணவக் கடவுள் விஷ்ணுவின் தசாவதாரங்கள் கூட உற்று நோக்கினால் மனித பரிணாமத்தையே காட்டி நிற்பதை உணரலாம்.

நீரில் வாழும் மீனாக - மச்சாவதாரம்.
நீரிலும் நிலத்திலும் வாழும் ஆமையாக - கூர்மாவாதாரம்.
நிலத்தைத் தோண்டி வாழும் பன்றியாக - வராக அவதாரம் 
வானை அளந்த குறு வடிவமாக - வாமன அவதாரம்.
மனிதன் பாதி சிங்கம் பாதியாக - நரசிம்ம அவதாரம். 
முழு மனிதனாக - பரசுராம, பலராம அவதாரம்.
உழவுக்கு உதவும் ஆவினங்களை மேய்த்து காப்பவனாக - கிருஷ்ணாவதாரம்.
மக்களை காக்கும் பேரறிவு நாயகனாக - இராமாவதாரம்.

இப்படி ஒன்றிலிருந்து ஒன்றாக இயற்கை பிரினிலையில் திருத்தப்பட்டு உயர்வான மனிதன் உருவாகியிருப்பதான இந்த அவதாரக் கதைகளுக்கும் டார்வின் கொள்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது புலப்படவே செய்கிறது.

மனிதன் தன் உடலின் ஒவ்வொரு செல்லிலும் அறிவுப்போராட்டத்தை நிகழ்த்தியே உயர்வுக்கு வந்திருக்கிறான். அறிவுப்போராட்டத்தின் உச்சக்கட்ட வெற்றியே மனிதன்.அளவில் பெரிய யானையிடமோ, திமிங்கலத்திடமோ,குரூரம் நிறைந்த சிங்கம்,புலி, சிறுத்தையிடமோ உலகம் அடங்கவில்லை. உலகம் மனிதனின் கையில் கோலிகுண்டாய் சிறுத்துப்போனது.மேற்சொன்ன விலங்குகளையேக்கூட மனிதனே ஆட்டிப்படைத்தான்.. மனிதனுக்கு மிஞ்சிய ஒரு பரிணாம வடிவத்தை இன்னும் இயற்கை யோசிக்கவில்லை.இவ்வுலகின் முடிசூடாமன்னன் மனிதனே. வானவெளியும் கிரகங்களும், நட்சத்திரங்களும். நிலவும் அவனுக்கே சொந்தமானவை என்று பட்டயம் போட்டிருக்கிறது இயற்கை.இப்படிப்பட்ட மனித கூட்டத்திற்கிடையே இன்று நடப்பதென்ன..?

நதிகளின் பெயரில் போர்க்கொடி, மதங்களின் பெயரில் ரத்த வெறியாட்டம், மொழிகளின் பெயரில் கொலைவெறி,கடவுளர்களின் பெயரில் கலவரம், அரசியலின் பெயரில் அக்கிரமம்,தனிமனித சுயநலம், வக்கிரம், போட்டி, பொறாமை, மனச்சிதைவு, தற்கொலை, தோல்வி, விரக்தி, சோகம்...ஏன்..ஏன்...?
அறிவு விலங்கான மனிதனுக்கு ஏன் இந்த அவலம்...? இந்த இழிநிலைக்கு காரணம் என்ன..?

கால் ஓட்டத்தில் நம்மை அறிந்து முறையாக உயர்த்திக்கொள்ள தவறியதே.
உண்மையில்..நாம் யார்.....?
நாம் உடல்களாக் இருக்கிறோம். உடல்களாக மட்டுமல்ல உயிர்களாக இருக்கிறோம். உடல் உயிர்களாக மட்டுமல்ல மனங்களாகவும் இருக்கிறோம். ப்குத்துப் பார்த்தால் இதுவே உண்மை.
சூத்திரமாக நிறுவுவதானால்..

உடல்+உயிர்+மனம்= மனிதன்
உடல்+உயிர்-மனம்= விலங்கு/தாவரம்
உடல்-உயிர்-மனம்=சடப்பொருள்

உடலுடன் உயிர் பிணைகையில் அறிவு பிறக்கிறது. இந்த அறிவு பஞ்சபூதங்களின் சாரமாய் இருக்கிறது.இவ்வுலகில் ஆறுவகை உயிர்கள் இருப்பதாக தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் கூறும் சூத்திரம்

ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அவற்றொடு நாவே 
மூன்றறிவதுவ அவற்றொடு மூக்கே 
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே 
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே 
ஆறறிவதுவே அவற்றொடு மனனே 
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே - மரபியல்-571

உடல்நிலையில் ஐம்பூதங்களையும், அப்பூதங்களுக்குரிய அறிவையும் ஒருங்கே அமையப்பெற்றவன் மனிதன்.அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் இது ஆன்றோர் வாக்கு.

நிலம் முதல் பூதம். இதற்கு தொடு உணர்வு மட்டுமே உண்டு. இடம் விட்டு இடம் நகராது. நிலமும் நிலம் சார்ந்த தாவரங்களும் இடம்விட்டு இடம் நகர்வதில்லை.எரித்தாலும் வெட்டினாலும் எதிர்க்க முடிவதில்லை. ஓரறிவு நிலமே மனிதனின் உடல்.உடலுக்கு தொடு உணர்ச்சி உண்டு. தட்பவெப்ப சூழலுக்கேற்ப நிலத்தின் தன்மையும் நிறமும் மாறுபடுவதுபோல தொடுவுணர்வுள்ள மனிதத் தோலிலும் நிற, தன்மை வேறுபாடுகள் உண்டு.நிலத்தில் செடி முளைத்தால் உடலில் முடி முளைக்கும்.நிலத்திற்கு மணம் உண்டு.உடலுக்கும் மணம் உண்டு. மனித உடலை நிலம் ஆட்சி செய்கிறது."ஊன் வளர்த்தேன் உயிர் வளர்த்தனே" என்பார் திருமூலர். உயிர் வளர்வதற்கு உணவாக உட்கொள்லப்படும் அனைத்துமே மண்ணின் விளைவே.

இரண்டாவது பூதம் நீர். நீருக்கு இரண்டறிவு. இடம்விட்டு இடம் நகரும்.நீரானது மனித உடலில் நாக்கை ஆட்சி செய்கிறது. வியர்வையாக, கண்ணீராக, உடலில் பெரும்பங்கில் நீரின் ஆட்சியே."செம்புலப்பெயல் நீர்போல் :மனித தன்னை சூழலுக்கேற்ப தகவமைத்துக்கொள்ள இந்த நீரின் நீர்மைப் பண்பே காரணமாகும்.

மூன்றாவது பூதம் காற்று.நிலம்..நிலத்தின்மேல் நீர்வெளியில் குமிழ்கள் உருவாகி காற்று உண்டாகிறது. உயிர்வெளியில் ஈரத்தையும் உலர்வையும், சூட்டையும், குளிரையும் சுமந்து செல்வது காற்றே. இது இயல்பாகவே வாசனைகளை சுமந்துசெல்லும் இயல்புடையது.காற்றானது நம் உடலில் நாசியை ஆட்சி செய்கிறது.நாசியின் வழியாகத்தான் நாம் சுவாசிக்கிறோம். நறுமணத்தையும், சுகந்தத்தையும் நுகர்கிறோம்.

நான்காவது பூதம் நெருப்பு.எதையும் தன்வயத்தில் எடுத்துக்கொள்ளும் ஒளிவடிவமானாது.நெருப்பு கண்களை ஆட்சி செய்கிறது.வெளியொளியை கண்களால் பார்க்கிறோம். அதுமட்டுமன்றி உடலிலும் உயிர்ச்சூடாக பரவி நிற்பது நெருப்பே.

ஐந்தாவது பூதம் ஆகாயம். எங்கும் நிறைந்து அதிர்வுடன் கூடிய ஒலிவடிவமாய் ஈதர் என்கிற அலைகளை சுமந்துகொண்டிருக்கிறது ஆகாயம்.ஓசைகளை மனிதன் அதிர்வலைகல் மூலமாகத்தான் கேட்கிறான்.வானிலி,தொலைக்காட்சி, நவீன ஒலைபேசிகள் எல்லாமே ஆகாசவாணிமயம்.

உணரமுடியும், சுவைக்க முடியும், நுகரவும் சுவாசிக்கவும் முடியும், பார்க்க முடியும், கேட்க முடியும். மனிதரைப்போலவே மற்ற உயிர்களுக்கும் இது சாத்தியம்தான். இந்த ஐந்தறிவோடே மனிதனும் நின்று போயிருந்தால் ஆடு,மாடு போல மனிதனும் ஒரு விலங்கே. அவனும் ஒரு அடிமைதான்.ஆறாவது அறிவாக மனம் வாய்த்த சமுக விலங்கே மனிதன். மனதை இதமாக பயன்படுத்துபவன் மனிதன் என வடநூல்கள் சொல்லும். மெய்வழிச்சாலை ஆண்டவர் மனுஷனை "மனு ஈசன்"எனபார்.

மனம் வாய்த்த காரணத்தால்தான் அடங்குபவனாக வாழாமல் அடக்குபவனாக மனிதன் வாழ்கிறான்.வாழ்வான். மனம் மனித பரிணாமத்தின் மகுடம்.மனம் வாய்த்த பிறகு மனிதன் அழத்தேவை இல்லை.மெய்மை இப்படி இருக்க மனித நிலையோ இன்று அவநம்பிக்கையின் எல்லையில் அலைந்துகொண்டிருக்கிறது.மனித முன்னேற்றத்துக்கான ரகசியம் மனதில்தான் ஒளிந்திருக்கிறது.அலாவுதீன் விளக்கும், அலிபாபா குகையும் மனம்தான். மந்திரக்கோலும், மந்திரக்கம்பளமும் மனம்தான். மோசேயின் கைத்தடியும் மனமே.

மனம் கேட்டால் கொடுக்கும், தட்டினால் திறக்கும், கறந்தால் கறக்கும், வடிக்க வடிக்க ஊறும்.

மனித சமுக உயர்வுக்கான மந்திரம் மனமே. மனம் பற்றிய அறியாமையே துன்பத்திற்கு காரணம். வாருங்கள் மனதை தரிசிக்க செல்வோம்.


Monday, April 13, 2009

நினைப்பதெல்லாம் நடந்துவிடும்-பகுதி 1. உயர்வின் ரகசியம்


 
ஒவ்வொரு மனிதனும் தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும் அப்படி உயர்த்திக்கொள்ளத் தவறிவிட்டால் நாம் அடுத்தவர்களை உய்ர்த்தும் தகுதி அற்றவர்களாகிவிடுவோம்.

எதற்காக நம்மை உயர்த்திக்கொள்ள வேண்டும்..?உயர்த்திக்கொள்ளுதல் அவசியமெனில் நாம் கீழான தாழ்வு நிலையில் இருக்கிறோமா..?அடுத்தவர் உயர்வுக்கு நாம் எவ்விதத்தில் பொறுப்பு..? உயர்வு நிகழவில்லை எனில் குடியா முழுகிவிடும்..?

ஒரு கருத்தை வைத்ததுமே ஆயுதம் ஏந்திய போர் வீரர்களாய் உள்ளத்தில் கேள்விகள் அணிவகுப்பது இயல்பே.

கிணற்று நீர் அதன் இயல்பில் மண்ணுக்கு கீழான சமநிலையில் இருக்கிறது. எந்த பயன்பாட்டிற்காக தண்ணீர் உருவானதோ அதை நிறைவேற்ற  மேலே வந்துதான் ஆகவேண்டும். அப்போதுதான் வறண்ட நாக்குகள் நனையும். மனிதனும் அப்படியே.

தண்ணீரே நினைத்தாலும் தானாக உயர முடியுமா..?ராட்டினம், கயிறு, வாளி, இவை எல்லாம் இருந்துவிட்டால் தண்ணீரை இறைத்துவிடலாம். கீழே இருக்கும் மனிதன் எப்படி உயர்வது..? யோக நூல்க்ளின் வழியே ஞானிகள் கூறினார்கள், "தலை மையத்தில் ஒரு ராட்டினத்தைத் தொங்கவிட்டு, தண்டுவடம் என்கிற கயிற்றில் கட்டி, உணர்வோடு இறக்கினால் அது கீழே இருக்கும் குண்டலினி ஊற்றைக் கிளப்பி உச்சிக்கு ஏறி ஞானத்தை முகர்ந்து வரும். மனிதன் உயர்வான்."

"அய்யய்யோ ஆளை விடுப்பா..குண்டலினியா.."என்று நாம் அலறுகிறோம். ஞானம் என்றாலே நமக்கு அச்சம். ஞானத்தை மதங்களோடு சேர்த்து பார்ப்பதே காரணம். மனிதர்கள் அவரவர் மத சிறைக்குள் இருந்துகொண்டு பூட்டைத் திறக்கும் சாவியை கொடுத்தாலும் வாங்க மறுக்கிறார்கள். சிறைக்குள்ளேயே சுதந்திரமாய் இருப்பதாய் பாவித்துக்கொண்டு உயர்வெய்தாமல் வாழுகிறார்கள்.அவர்களுக்கு எதையுமே அறிவியல்பூர்வமாகத்தான் சொல்லவேண்டும்.

என்ன செய்வது..? உலகமே திரும்பி பார்த்து ஏங்கும் இந்த ஞான பூமியில்தான் வறுமை, பிணி,பஞ்சம்,பட்டினி, விலைபொருளாய் கல்வி, பாலைவன ஊற்றாய் வேலை வாய்ப்பு,போட்டி, பொறாமை, எய்ட்ஸ்,எல்லாமே தலை விரித்தாடுகிறது.நாம் சாவிகளை தூக்கிப்போட்டு விட்டோம் அதனால்தான் தாழ்வு.சாவியை தேடி எடுத்துவிட்டால் உயர்வுதான். எடுப்பதற்கு தேவை கொஞ்சம் அறிவு, கொஞ்சம் பொறுமை, கொஞ்சம் உணர்வு.

இந்த பூமி உருண்டையும் அதன் மீதான உயிர் தொகுதிகளின் வாழ்வும் மிக உயர்வான இடத்திலிருந்து இறங்கி வந்தது என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.எங்கிருந்து நாம் எதுவாக புறப்பட்டோமோ..அவ்விடத்திற்கு மீண்டும் திரும்புவதே உயர்வு. வரும்போது இறங்கி இறங்கி வந்திருக்கிறோம். திரும்புகையில் ஏறி ஏறி உயர வேண்டியிருக்கிறது. அதனால்தான் இவ்வுலகின் ஞானத்தகப்பன் "வானின்று உலகம் வழங்கி வருதலால் " என்றான்.வாழ்வு துவங்கிய இடம் வானம். வானமே நம் எல்லை."மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்"என்பார்கள். வானம்தான் மரத்தை வைத்தது, வானமே தண்ணீரை ஊற்றுகிறது.
"மண்ணோடு விண் காட்டி மரைந்து மறையா அருளைக்
கண்ணோடு கண்ணாக என்று காண்பேன் பராபரமே"- என்று ஏங்குவார் தாயுமானவர்.

நாமெல்லாம் விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்தவர்கள்தான்.மண் சூடே சுகம் என்று மண்ணீலேயே தங்கி விட்டதால் விண்ணின் முகவரி மறந்து போயிற்று.இல்லையெனில் நாமும் "மண்ணோடு விண்காட்டி" என ஏங்கத்துவங்கியிருப்போம். மறந்ததை நினைவுபடுத்தவே ஆலயங்களில் ஏற்றப்படும் கற்பூரக்கட்டிகள் சோதியாய் உயர்த்தும் தம் ஒற்றை சுட்டு விரலால் "என்னை உருக்கி நான் உயரும் திசை கண்டு தெளிந்து உன்னையும் உயர்த்திக்கொள் "- என்கிறதோ தெரியவில்லை.

நம் மக்களுக்கு செத்தால்தான் பரலோகம். கண்போன பின்னால்தான் சூரிய நமஸ்காரம், விழிகளை விற்றுத்தான் சித்திரம் வாங்குவார்கள். வானத்தோடான உறவு என்றாலே மரணத்துக்கு பிறகுதான் எனும் தப்பெண்ணமும் இருக்கிறது.ஆகாயத்தில்தான் நம் ஆதி தாய் இருக்கிறாள். வாழும்போதே நாம் பரலோகத்தை பார்த்துவிட வேண்டும்.

அதுவே உயர்வு. அதுவே ஆனந்தம்.

"நிலமைந்து நீர் நான்கு நீடங்கி மூன்றே 
உலவை இரண்டு ஒன்று விண்"

இது பார்ப்பதற்கு திருக்குறள் போலவே தெரியும். ஔவையின் குறள்."பிறப்பின் நிலைமை" எனும் அதிகாரத்தின் ஐந்தாம் குறள். இக்குறளில் அப்படியென்ன இருக்கிறது..?பஞ்ச பூதங்களின் வரிசைதானே சொல்லப்பட்டிருக்கிறது. ஆம்.. எப்படி சொல்லப்பட்டிருக்கிறது..?

ஆகாயம்   -முதல் பூதம்.
காற்று  - இரண்டாம் பூதம் 
நெருப்பு  - மூன்றாம் பூதம் 
நெர்  - நான்காம் பூதம் 
நிலம்  - ஐந்தாம் பூதம்.

இக்குறளில் வேறேதேனும் நுட்பங்கள் உள்ளதாவெனில் உள்ளது. உலகம் தோன்றிய பரிணாம வரிசை இதுதான். ஆனால் நாம் இதற்கு ஏற்கனவ ஒரு வரிசையை தந்திருக்கிறோம்.

நிலம் -நீர்-காற்று - நெருப்பு - ஆகாயம் என்று.
இதை உணர்ந்து சொன்னவர்களும் ஞானிகள்தான். இரண்டில் எது சரி..? எது தவறு..?

இரண்டுமே சரி.

கோடி கணக்கான ஆண்டுகள், யுகங்கள் என காலத்தையும், வாழ்கைக்கான விதை புள்ளியையும் தன்னுள் ஒடுக்கி தன்மயமாய் இருந்த சுத்தவெளியில் 
ஆகாயத்தின் தன்னறிவு காற்றறிவாய் இறங்கி , பின் தீ அறிவுக்கு இறங்கி ,ஆதன்பின் நீர் அறிவுக்கு இறங்கி இறுதியாய் நில அறிவாய் நிலைத்தன் விளைவுதான் இந்த உயிர்கோளம் உருவாக் காரணம்.எரிந்து சுழன்று குளிர்ந்து அணைவை நோக்கிப்போகும் நெபுலாவின் சின்ன சின்ன பிரதிகள்தான் நாமெல்லாம்.

விண்ணில் துவங்கிய அதிர்வு மண்ணீல் உயிராய் மலர்ந்தது. உயிரின் அறிவு நாட்டம் மனிதனை கொண்டு வந்தது. மனிதன் தான் எங்கிருந்து வந்தோம் என ஆராயத் துவங்கினான்.

நிலத்திலிருந்து உயர்ந்து  நீருக்கும்.
அதிலிருந்து உயர்ந்து நெருப்புக்கும்..
நெருப்பிலிருந்து உயர்ந்து காற்றுக்கும்..
காற்றிலிருந்து உயர்ந்து ஆகாயத்துக்கும் என்றொரு வரிசையக் கண்டுகொண்டான்.

ஆகாயம் என்பது அருள்வெளி - பூமி என்பது பொருள்வெளி.
முதல் வரிசை வந்த வழி. இரண்டாம் வரிசை செல்லும் வழி.

ஒடுங்கியது வெடித்தால் உலகம். வெடித்தது ஒடுங்கினால் ஞானம்.

அருளிலிருந்து பொருளுக்கு இறங்கி வந்தோம். 
பொருளிலிருந்து அருளுக்கு ஏறி உயர்வோம்.

"அருளில்லார்க்கு அவ்வுலகமில்லை 
பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை.."

இதை உணராமல் தடுமாறினால் முழுமையான உயர்வடையாமல் நடுவழியில் தத்தளிக்கத்தான் வேண்டும்.

"தாளுண்ட நீரை தலையாலே தான் தருதலால்.."- என பாடுவாள் ஔவை.
எத்தன்மைத்தான நீராய் இருந்தாலும் அதை உறிஞ்சி வடிகட்டி உயர்த்தி தன் உச்சியில் இனிக்கும் நீராய், ஞான ரசமாய் வழங்கும் ஓரறிவு உயிரான தென்னைக்கே சாத்தியம் என்றால் ஆறறிவு மனிதனின் உயர்வில் என்னவெல்லாம் நிகழும்..?

"நினைப்பதெல்லாம் நடக்கும்"

உயர்வோடு உள்ளத்தில் உருவான எண்ணங்கள் எல்லாம் மெய்யாகும். அம்பலத்தில் அரங்கேறும். கனவுகள் மெய்ப்படும். தோல்விகள் அழிந்து வெற்றிகள் பெருகும்.ஆனந்தம் ஊற்றெடுக்கும்.

வாருங்கள் உயர்வின் திசையில் பயணிப்போம்....

Thursday, March 19, 2009

பல்லாங்குழி ஆடலையோ..பல்லாங்குழி.


இந்த கட்டுரை எழுதப்படுவதற்கு முழுமுதல் காரணாமாய் பின்புலத்தில் இருந்து என்னை இயக்கியது இணையக் குழும எழுத்தாளர்களில் மகாப்பெரியவர் ஐயா நடராசன் கல்பட்டு நரசிம்மன் அவர்களும், அவர்களுடைய "பல்லாங்குழியும் பல்போன பாட்டியும்" என்கிற நாடகமும்தான். அதை நீங்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டுமென்பது எனது பேரவா. இதோ இணைப்பையும் தந்திருக்கிறேன்.http://groups.google.com/group/palsuvai/browse_frm/thread/3e7015198b6e4d15?hl=en கொஞ்சம் பெரிதாக இருக்கிறதே என்று நீங்கள் உங்கள் அவசர உலகை காரணம் காட்டி நழுவிச்சென்றால் ஒரு பெரிய நல் இலக்கியத்தை இழந்த நட்டத்தை அடைவீர்கள்.

சரி நாம் ஏற்கனவே பல விளையாட்டுகளுக்கு பின்னால் இருக்கும் தாத்பர்யங்களையும், தத்துவங்களையும் பற்றி மிக விரிவாக பேசிவருகிறோம். அதில் இன்றைய சுற்று ஆட்டம். பல்லாங்குழி.பொதுவாக ஆங்கில வழக்கப்படி ஆட்டங்களை..உள்ளரங்க ஆட்டம், வெளியரங்க ஆட்டம் என பிரிப்பதுண்டு. அவ்வகையில் இந்த ஆட்டம் உள்ளரங்க ஆட்டம் . இருவராக ஆடக்கூடிய ஆட்டங்கள் நிறைய உண்டு. நம் விஸ்வனாதன் ஆடும் சதுரங்கம் முதல், நம்ம ஊரு பொண்ணு உலகையே கலக்குதே அந்த கேரம் வரைக்கும் நிறைய ஆட்டம் இருந்தாலும்.. அவற்றிற்கெல்லாம் இல்லாத தனிபெரும் பழமையும், தத்துவ தன்மையும் பல்லாங்குழிக்கு உண்டு.

இருவராக ஆடும் எல்லா ஆட்டங்களுமே எதிரில் விளயாடுபவர்களை வீழ்த்தும் ஆட்டம். பல்லாங்குழி மட்டுமே வெற்றிக்கும் தோல்விக்கும் பின்னால் ஒரு சத்தியத்தையே சொல்லக்கூடிய ஆட்டமாகும்.பல்லாங்குழி மனையின் அமைப்பை கவனித்தால் பெரும் வியப்பு தோணும் எனக்கு. ஆம்..ஒரு மீனின் வயிற்றை ஒரு பகுதியில் மட்டும் கிழித்து அப்படியே திறந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு அமைப்பு. ஒரே மனையாய் மூடியிருந்தது இப்போது பாதி பாதியாய் பிரிந்து, இந்த பக்க ஆட்டக்காரரக்கு பாதி அந்த பக்க ஆட்டக்காரருக்கு பாதி. அவர்களுக்கான பாதியில் இருப்பது ஏழு குழிகள். ஒன்று கூடாது..ஒன்று குறையாது. ஏழு குழிகள். மூடிய போது ஏழு முழுக்குழிகளாய் இருந்தவை ஆட்டம் துவங்கியதும்..ஏழு அரைக்குழிகளாக பிரிந்துவிட்டது.
இந்த ஏழு என்றதும் பலருக்கும் பல உண்மைகள் தோணலாம்..அதென்ன மிக சரியாய் ஏழு என்று..?ஆம் நம் கலாச்சரத்தில் ஏழுக்கு இருக்கு இருக்கும் முக்கியத்துவத்தை யாராலும் மாற்றமுடியாது. நாம்தான் இன்னும் உணராமல் இருக்கிறோம்.

இந்த பல்லாங்குழிமனையே ஒரு மனித உடல்தான். மனித உடல்தான் என்ற பிறகு அதைபோய் பிரிப்பானேன்..? பிரிக்கத்தான் வேண்டும். காரணம்..ஒவ்வொரு மனிதனும் இரண்டாகத்தான் இருக்கிறோம். ஆம்..இவ்வுலகின் ஒவ்வொரு ஆணும் பெண்ணுமே அர்த்தனாரிகள்தான்.நம் உடலில் உச்சந்தலை சகஸ்ரம் உட்பட இருக்கும் ஆறு ஆதாரசக்கரங்களே இந்த ஏழு குழிகள்.சிவபெருமான் தன் உடலில் பாதியை சக்திக்கு கொடுத்துவிட்ட கதை நமக்கு தெரியும். இதை நம் ஒவ்வொருவரின் வாழ்கையோடு பொருத்திபார்க்க முடியுமா..? 
நிச்சயமாக முடியும். இந்த உலகமே ஈர்ப்பு தத்துவத்தின் அடிப்படையில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்மைக்குள்ளும் சரிபாதி பெண்மை இருக்கிறது. அதுபோலவே ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் சரி பாதி ஆண்மை இருக்கிறது. அது மறைத்துவைக்கப்பட்டிருக்கிறது. இதை காலம் உணர்த்தும்போது ஒரு ஆண் தனக்குள் இல்லாததான பெண்மையை ஒரு பெண்ணிடம் தேடுவதும், ஒரு பெண் தன்னிடம் இல்லையென கருதும் ஆண்மையை ஒரு ஆணிடம் தேடும் தன்மைதான் உடல் ஈர்ப்புக்கான அடிப்படை.

அந்த ஈர்ப்பு ஒரு முடிவுக்கு வந்து பந்தத்தில் நிறைவுறும்போது - இணைகளாய் மாறிய அவர்கள் அர்த்தநாரிகள் ஆகிறார்கள்.தம் நேசங்களை நிறைவு செய்துகொள்ளும் பொருட்டு அன்பு காட்டுபவர்களாகவும், விட்டுதருபவர்களாகவும் மாறுகிறார்கள்.தனி தனி உடல் ஆனாலும் வாழ்வின் வெவ்வேறு தளங்களில் மனதால் இணைந்தே அவர்கள் முடிவெடுத்து வாழவேண்டியிருக்கிறது.

சரி பல்லாங்குழி ஆட்டத்திற்கும் இந்த தன்மைகளுக்கு என்ன தொடர்பு...? 
நம் வாழ்வின் ஆதாரமாய் விளங்கும் நம் ஆதாரசக்கரங்கள் ஆண் - பெண்ணாய் பிரிந்து அதே நேரத்தில் ஒத்த முடிவில் இணைந்து செயல்படும் தன்மையதாய் உள்ளதன் குறியீடே பல்லாங்குழியாட்டம்.
இன்னொரு விதத்தில் சொல்வதானால் - கோவில் அரசமரத்தடியில் இருக்கும் 'நாகல்'பற்றி நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, நம் உடலின் ஆறு ஆதார மையங்களை உச்சி சகஸ்ராரத்தில் இணைப்பதான குண்டலினி பாம்பின் மடித்துவைத்த தோற்றமே பல்லாங்குழி மனை. மிக பழமையான பல்லாங்குழி மனைகளில் பாம்புகள் செதுக்கப்பட்டிருப்பதை நீங்களே பார்க்கமுடியும்.

ஆணின் குண்டலியினில் பெண்ணின் ஆளுமை, பெண்ணின் குண்டலியினில் ஆணின் ஆளுமை , மற்றும் அத்தியாவசியமே.. பல்லாங்குழி ஆட்டத்துக்கான அடிப்படை. ஒரு ஆண் தனியாக முடிவெடுப்பதும், ஒரு பெண் தனியாக முடிவெடுப்பதும்..வாழ்வில் என்ன வகையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு பெரிய உதாரணங்கள் தேவை இல்லை . மகாபாரதத்தில் சூதாடியபோது ஆண்கள் முடிவெடுத்தார்கள். இராமயணத்தில் மானுக்கு ஆசைப்பட்டு கணவன் ராமனையும், இலக்குவனையும் இயக்கியபோது சீதை முடிவெடுத்தாள்.
அரிச்சந்திரபுரானத்தில்- தன் உண்மை பேசும் கொள்கையிலிருந்து தவறக்கூடாது என்பதற்காக மன்னன் அரிச்சந்திரனும் - அவனது மனைவியும் சேர்ந்து முடிவெடுத்தார்கள்.

இருவர் ஒத்திசைந்து முடிவெடுத்து காலவோட்டத்தில் துன்பம் வந்தாலும் நிலையான இறுதி இன்பத்தை அடைய இப்படி எடுக்கப்படும் முடிவுக்கு பல்லாங்குழியாட்டத்தில் நிருபணம் உள்ளதா..?
உள்ளது. அந்த ஏழு குழிகள் சொன்னோமல்லவா..? அவை வேறெதுவுமில்லை..
1.சகஸ்ராரம்
2.ஆக்ஞா
3.விசுக்தி
4.அனாகதம்
5.மணிபூரகம்
6.சுவாதிஷ்டானம்
7.மூலாதாரம்.

இந்த ஏழின் முழுமையும் இந்த ஆட்டத்தில் சரி பங்காய் பிரிக்கப் பட்டிருக்கிறது.
நம் ஞானியரின் பார்வையில் இந்த ஏழு சக்கரங்களும் இன்னொரு பார்வையில் சுட்டிக்காட்டபட்டுள்ளன.
சகஸ்ராரம் துவங்கி விசுக்திவரை - ஆகாயம் அல்லது மேலோகம் அல்லது சொர்க்கம் எனவும், அனாகதம் துவங்கி சுவாதிஷ்டானம்வரை பூலோகம் எனவும், கடைசி மூலாதாரம் அதற்கு கீழ் நரகம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இப்போது பல்லாங்குழி மனையை விரித்துவைத்துக்கொள்ளுங்கள். சோழிகளை எடுங்கள். எவ்வளவு சோழிகள் தெரியுமா ஒவ்வொரு குழிக்கும் எட்டு எட்டு. இது எண்குணத்தின் குறியீடு. இந்த எட்டு குணங்களைக்கொண்டுதான் நாம் நம் ஒவ்வொரு உணர்வுகளையும் இந்த உலகை நோக்கி பிரதிபலிக்கிறோம்.
விளையாட இருவர் அமர்ந்தாயிற்று. அவர்தம் முறையே இடது பக்கம் ஒருவருக்கும் வலது பக்கம் ஒருவருக்குமாக இருக்கும் முதல் குழியே சகஸ்ராரம். ஆட்டத்தை துவங்குபவர் எந்த குழியில் இருந்தானாலும் விளயாட்டை துவங்கலாம்.

permutation and combination தத்துவப்படி- முடிவுகள் வெவ்வேறாக இருந்தாலும் - மேலோகம் என்று சொல்லக்கூடிய 
முதல் மூன்று குழிகளிலிருந்து துவங்கப்படும் ஆட்டம் மிகுந்த லாபம் தரக்கூடியதாகவும், பூமி, நரகம் என்று சொல்லக்கூடிய பகுதியில் துவங்கும் ஆட்டத்தின் போக்குகள் வேறு மாதிரி இருப்பதையும் நீங்கள் விளையாடி பார்த்தால் கண்கூடாக அனுபவிக்கலாம்.

இந்த வாழ்வு எதிர்மறைகளுக்கு இடையில் ஒத்திசைந்து நேர்மறையாய் வாழவேண்டியதன் தேவையை பல்லாங்குழி ஆட்டம் உணர்த்துவதை நீங்களே உணரமுடியும்.
சிறு வயதில் என் காது கேட்காத பாட்டி - என்னோடு விளையாடும்போது ஜெயித்துக்கொண்டே இருப்பாள். நான் அழுவேன். ஒரு முறை சொன்னாள்.."இந்த குழியிலேர்ந்து எடுத்து ஆடு..நீயும் ஜெயிப்பே.."என்று.
ரகசியம் அதுதான். நம் முன்னோர்களின் அத்தனை உருவாக்கங்களும் ஞானமேயன்றி வேறில்லை. 

Monday, March 16, 2009

ஞான விளையாட்டுகள்


மனித வாழ்வை வினையாட்டு என்பதா..?அல்லது விளையாட்டு என்பதா..? 
"...விளையாட்டுடை யாரவர் அன்னவர்க்கே சரண் நாங்களே .."- என ஒருபாட்டு வரும். வாழ்வு ஒரு விளையாட்டுதான். சிலர் நேர்த்தியாய் விளயாடி வெற்றி கோப்பையோடு வீடு திரும்புகிறார்கள். பலர் வெறுங்கையோடு கோப்பைக்காக அல்லாடத்தான் வேண்டியுள்ளது.

ஆம் நம் முன்னோர்கள் வாழும் கலையையும் விளயாட்டாகவே சொல்லி வைத்தார்கள்.ஏற்கனவே "வெறும் ஆட்டம் அல்ல கரகாட்டம்" கட்டுரை படித்திருப்பீர்கள், அந்த வரிசையில் இன்று நாம் முன்வைக்கும் விளையாட்டு "கும்மியாட்டம்" மற்றும் அதன் தன்மைகளை ஒத்திருக்கும் "தாண்டியா" ஆட்டம்.




இவை சாதாரண விளையாட்டுகள் அல்ல.தனிமனித வாழ்வியல் ஒழுங்கையும் ஒவ்வொரு தனி மனிதரும் தம் சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய பங்களிப்பின் கடமையையும் உணர்த்த வேண்டி ஏற்படுத்தப்பட்ட விளையாட்டுகள் என்றால் மிகையில்லை.

இம்மாதிரியான விளையாட்டுகள் பொதுவாக திருவிழா காலங்களில் ஆடப்படுவது நாம் அறிந்ததே.நமகலாச்சாரத்தின் பார்வையில் திருவிழாக்களே பாட்ங்கள்தான்.கும்மி ஆட்டமும், தாண்டியா ஆட்டமும் திருவிழா காலங்களில் ஆடப்படும் ஆட்டங்களே. இவற்றில் ஆன்மீக சாரமும், உளவியல் கூறுகளும், அறிவியல் அற்புதங்களும் திரைமறைவில் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன.



நாம் பல்லாயிரம் முறை கோயிலுக்கு போயிருக்கிறோம். அர்ச்சகர் சாமிக்கு தீபாராதணைக் காட்டும் முறையை உன்னிப்பாக கவனித்து உள்வாங்கியிருக்கிறோமா என்றால் இல்லை என்பதே விடை. திருமூர்த்தத்தின் உச்சந்தலை துவங்கி..திருப்பாதம் வரை - ஒரு பாம்பு வளைந்திருப்பது போன்ற பாவனையில் நமக்கு காட்டும் நோக்கில், அந்த பாம்பினை அடையாளம் காட்டி - அதை கீழிருந்து மேல் உயர்த்தி எடுத்து சென்று மூர்த்தியின் முகத்தைக் காட்டுவார் அர்ச்சகர். குண்டலினி என்கிற பெயரும் அதன் முக்கியத்துவமும் , உள்ளர்த்தமும் மதப்பார்வையில் பார்க்கப்படுவதால் அதன் இன்றியமையாத தன்மையை உணரமுடியாமல் ஆகிவிட்டது.

குண்டலினியை - யோகவியல் சாராது - உளவியல் ரீதியான பார்வையில் பகுப்போமேயானால் "தனிமனித எழுச்சி"-என பொருள்கொள்ள முடியும். அறிவியல் ரீதியாக பொருள்கொண்டால் "உடலியல் உட்கூறுகளை நெறிப்படுத்துதல்"என பார்க்க முடியும்.

உலகவாழ்வே இம்மூன்று அம்சங்களைத்தான் சார்ந்துள்ளது.நாம் ஒவ்வொருவரும் நம் தனி மனித எழுச்சிக்கு பொறுப்பேற்க வேண்டும். அதன் பின் நம் சமூக பங்களிப்பை உனர்ந்து அதிலும் எழுச்சிக் காண வேண்டும். காரணம் நாம் தனிமனிதர்கள் மட்டுமல்ல..சமூக கூட்டமும் கூட. இந்த பிரிக்க முடியாத பந்தத்தை நாம் மற்க்காதிருக்கவே முன்னோர்கள் இத்தத்துவங்களை விளையாட்டிற்குள் பதுக்கி வைத்தார்கள் என கொள்ளமுடியும்.

அரசமரத்தடியில் இருக்கும் "நாகல்" நம் ஆறு ஆதார சக்கரங்களை குறிக்கும் அடையாளம் என ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அங்கு அது வணங்கப்படுவதற்கு, இங்கு அது உணர்ந்து, விளையாடி ஏற்றம் பெறுவதற்கு.
கும்மியாட்டத்தில் வெறும் கைகளை தட்டி ஓசையெழுப்புவதையும்,குனிந்து நிமிர்ந்து விளையாடுவதையும், கூட்டமாக, குழுவாக ஆண், பெண் என ஆடுவதையும் மட்டும்தான் மிக சாதாரன பார்வையில் பார்த்திருக்கிறோம்.
இப்போது நாம் குறிப்பிடும் முறையில் இந்த விளையாட்டை அணுகிப் பாருங்கள் அதில் பொதிந்த ஞானம் புலப்படும்.

கீழே மூலாதாரத்தில் இருக்கும் சக்தியை குனிந்து - அங்கிருந்து எழுப்பி - ஒவ்வொரு ஆதாரமாக உயர்த்தி -இறுதியில் தலை உச்சிக்குக்கொண்டுபோய் தட்டி முடிப்பது ஒரு சுற்று.- அதன் பின் அப்படி தட்டி முடித்த நிலையில் - அப்ப்டி எழுச்சியின் நிலைக்குப் போன ஒவ்வொருவரும் தமக்குள் அதாவாது தம் எழுச்சியை பிறரோடு பங்கிட்டுக்கொள்வதான ஒரு சுற்று. கீழ் நிலையிலிருந்து மேலுக்கு உயரும்போதே அடுத்தவரோடு இணைந்து, பகிர்ந்து ஒத்திசைவகளோடு கூட்டமாய் மூன்னேறும் வகையிலான ஒரு சுற்று. 
தனியாக கற்றல் - குழுவாக கற்றல்- கற்றதை பகிர்தல் - என்கிற பார்வை எவ்வளவு உன்னதமாய் இருக்கிறது பார்த்தீர்களா..?இதையே இன்னும் கொஞ்சம் அழுத்தி சொல்வதனால் மனித சக்தியினை உயர்த்தியதன் விளைவை 
தனியாக பெறுதல்- குழுவாக பெறுதல் - ஒவ்வொருவரோடும் பகிர்தல் .
இந்த நிலை அறிவிலும், பொருளிலும் எட்டப்படுவதே உண்மையான சமதர்மம் ஆகிவிடுமல்லவா..?

கும்மியாட்டத்தில் மனிதனின் வலது - இடதான சக்திகள் பெருக்கல் குறியாய் அடையாளம் காட்டப்பட - கைகள் தட்டி ஓசை எழுப்பப்படுகிறது. தாண்டியா ஆட்டத்தில் வெறும் கைகளுக்கு பதிலாக இரண்டு குச்சிகள் - நம் மாயா குண்டலினி பெருக்கல் உறி வடிவத்தில் இயங்குவதை அடையாளமாக காட்ட பயன்படுத்தப்படுகிறது.

மனித வாழ்வில் ஆன்மிகமும்,உளவியலும்,அறிவியலும் பிரிக்க முடியாத அம்சங்கள். நமது நோக்கம் மனிதம் எழுச்சிப் பெற வேண்டும். அந்த எழுச்சி ஆன்மிகம் சார்ந்து நிகழ்ந்தாலும் சரி, உளவியல் சார்ந்து நிகழ்ந்தாலும் சரி, அறிவியல் சார்ந்து நிகழ்ந்தாலும் சரி.
இம்மூன்று தத்துவங்களுக்கும் பொருந்துகிற வண்ணத்தில்தான் நம் முன்னோர்கள் அனைத்து ஏற்பாட்டையும் செய்துவிட்டு போயிருக்கிறார்கள்.
புரிந்துகொண்டு விளையாடுவோம் வாருங்கள்..!

Monday, March 9, 2009

எது சரி..?எது தவறு...?- மணிபூரகம்


இதயத்திற்கும் நுரையீரலுக்கும் நடுனாயகமாய் விளங்கும் அனாகதம் உனர்வு மையம் என பார்த்தோம். நம் உடல் அமைப்பு என்பது வலது இடதாக சமச்சீராக அமைந்துள்ளது. வலதில் ஒரு கை,ஒருகால், செவி, கண் இதைப்போன்றே இடதிலும் ஒரு கை,ஒரு கால்,செவி, கண். உடலின் ஒட்டுமொத்த இடது பாகத்தையும் வலது மூளையும், ஒட்டுமொத்த வலதுபாகத்தை இடது மூளையும் கட்டுப்படுத்துகிறது.

ஐம்புலன்கள் என்று சொல்லக்கூடிய கண்,காது,செவி, வாய்,மூக்கு ஆகியவை நமது கட்டுப்பட்டில் இயங்கும் வண்ணம் புறத்தே அமைந்துள்ளது. இந்த புலன்கள் அனுபவங்களைத் தரக்கூடியவை என்பதால் வெளி உலகை பார்க்கும் வண்ணம் இயற்கை அமைத்துள்ளது. அதே சமயம் நம் உடல் இயங்க தேவையான உறுப்புகள் ஒவ்வொன்றும் உடலின் உட்புறமாய் வைக்கப்பட்டு பூட்டப்பட்டுள்ளது. நம் விருப்பத்திற்கேற்ப நாம் அதை இயக்க முடியாது.தானியங்கிகளாக அவை இயங்குகின்றன.

ஞானிகள் நம் உடலில் ஒன்பது துளைகள் இருப்பதாக கூறுவார்கள். இரண்டு கண்கள் + இரண்டு செவிகள் + இரண்டு நாசி துவாரங்கள் +வாய்+ ஜல + மல துவாரம் என மொத்தம் ஒன்பது. இதில் கழிவு வெளியேற்றத்திற்கு உதவும் கடைசி இரண்டை தவிர்த்து மற்றவை அனைத்துமே உள்நுழைவு வாயில்கள் ஆகும்.
கண்களின் வழியாக..காட்சியையும், செவிகளின் வழியாக ஓசைகளையும்,நாசியின் வழியாக நறுமணத்தையும்,உள்வாங்குகிறோம். வாய் வழியாக நாம் உயிர் வாழத்தேவையான உணவினை உட்க்கொள்கிறோம்

உணவானது வாய்வழியே சென்று நமக்கு சக்தியை தருவது குழந்தைகளுக்கும் தெரியும் சாதாரண விடயம். ஆனால்..கண்வழி நாம் பார்க்கும் காட்சிகளும் , செவி வழி கேட்கும் ஒலியும்.நாசிவழி நுகரும் மணமும் நமக்கு சக்தி தருவதை நாம் உணர்வதில்லை.உடலுக்குள் செல்லும் உணவு செய்யும் அத்தனை பணியையும் இந்த புலன்வழி நாம் கொள்ளும் அனுபவங்கள் நமக்குள் செய்கின்றன.

நீங்கள் விரும்பாத காட்சி ஒன்றை தொண்டைக்குழி ஏற்காது- அதனால்தான் " அவர் சொன்னதை என்னால் விழுங்கவே முடியல" என்கிறோம். விழுங்கி தொலைத்த ஒருவர் "என்னால அதை ஏற்க முடியல "என்கிறார். ஒரு விஷயத்தை ஏற்கவேண்டியது அனாகதம் என்கிற இதயத்தின் பணி. ஏற்றுக்கொண்ட ஒருவர் சொல்கிறார்" அதை என்னால் செரிக்க முடியல.."

வாய் வழியாக நாம் உட்கொள்ளும் உணவு நேரடியாக நமக்கு சக்தியாக சேராது.இட்லி,தோசை, பொங்கல், பூரி என வகை வகையாக நாம் உள்ளே தள்ளிய அனைத்தையும் இரைப்பை கார்போஹைரேட்டகவும்.புரதமாகவும்,உப்பாகவும்,சர்க்கரையாகவும்,இதர வைட்டமின்களாக மட்டுமே பார்க்கும். தன்னிடத்தில் வந்த அரைத்த உணவுக் கலவையை சாதக பாதகங்களோடு இனம் பிரிக்கும் வேலையை செய்யும். அதன் பின்னரே செரிமாணப்பணி.

இந்த பணி-உள்ளூர் தபால் நிலையத்தில் போட்ட ஒரு கடிதத்தை ஊர்வாரியாக பிரிப்பார்களே(sortout)அந்த பணிக்கு ஒத்தது.நம் வாழ்வில் நாம் சந்தித்த ஒரு நிகழ்வின் சாதக பாதகத்தை ஆய்ந்து - பிரிக்கும் மகத்தான பணியைத்தான் "மணிபூரக மையம்" செய்கிறது. இந்த மையத்தின் அதிமுக்கிய செயலதிகாரிகளாய் முன் நிற்பவர்கள் நமது சிறுனீரகங்கள் ஆகும்.

ஒவ்வாமையான உணவு வயிற்றில் இறங்கினால் -செரிமானத்தை,கழிவுவெளியேற்றத்தை பாதித்து உடல் ஆரோக்கியத்திற்கு எப்படி ஊரு விளைவிக்குமோ அதை போலவே நாம் அனுபவிக்கும் ஒவ்வாமையான விஷயங்கள் உடலை பாதிக்கும். அதனால்தான் உடல்னலம் கெட்டால் மனனலமும் சேர்ந்தே கெடுகிறது. உடலும் மனமும் ஒன்றி பிணைந்த அம்சங்களாகும். இதமான உணவினால் நம் ஆரோக்கியத்தை பேணுகிற மாதிரி, இதமான உணர்வுகளால் இந்த மையத்தை நாம் அணுக வேண்டும்.

கருத்தியல்களில் நாம் முரண்பட முரண்பட..இந்த மையத்திற்கு அழுத்தம் அதிகரிக்கும். உணர்வில்லாமல் உள்ளே தள்ளிய உணவை ஓரளவுக்கு பிரிக்க முயன்று, இறுதியில் பிரிக்க முடியாமல் கொழுப்பு கட்டிகளாக உடலில் கிடைக்கும் இடத்தில் எல்லாம் அப்பிவிடும். நாம் கண்டபடி திணிக்கும் கருத்துக்களுக்கும் இதே கதைதான்.
பகவான் புத்தர்தான் இந்த ஆய்வை கண்டறிந்தார். பகுக்க முடியாத நிலையில் ஆசைகளும், கனவுகளும், இந்த மையத்தால் ஓரங்கட்டப்பட்டு உடலில் அதிர்வுகளாக, கண்ணுக்கு புலனாகாத முடிச்சுகளாக இறுகுகின்றன என கண்டறிந்தார்.

கார் வாங்கவேண்டும் என தகுதிக்கு மீறி ஆசைப்பட்டவனுக்கு என்ன நிகழும்..? அந்த எண்ணம் நிறைவேறாத நிலையில் உள்ளே அதிர்வாக தங்கும். நாளொருமேனி பொழுதொரு வண்ணம் சாலையில் ஓடும் வண்ண வண்ன கார்களை பார்க்கும்போதெல்லாம் ஏங்கும். காரில் செல்பவர்களைப் பார்த்து பொறாமைப்படும். நாம் வாழவேண்டிய வாழ்க்கயை இன்னொருவர் வாழ்வதாய் பார்க்கும். "நம்மால் வாங்க முடியவில்லை பக்கத்து வீட்டுக்காரன் எப்படி வாங்கினான்" என ஆராய்ச்சி செய்யும்.

மூச்சை ஒழுங்குபடுத்தி உடலுக்குள் நிறைவேறாத ஆசைகளாய் குடிகொண்டிருக்கும்- இந்த முடிச்சுகளை அகற்றும் தியான முறைதான் புத்தர் கண்ட 'விபாசனா'தியான முறை.

சிறுநீரகம் கெட்டுப்போனால் டயாலிசீஸ் செய்வதைப்போல- நம் மனம் திரிபு நிலைக்கு வரும்போதெல்லாம் உடனுக்குடனே நம் மனதையும் நாம் டயாலிசீஸ் செய்ய வேண்டும். அப்படி செய்தால் மனிபூரக மையம் நம்மை செவ்வனே வைத்திருக்கும்..இல்லையெனில்..அறைகுறையாய் தன் பணியை முடித்து - ஃபைலை அடுத்த மையத்திற்கு தள்ளிவிடும்..
அடுத்த மையம் என்ன செய்யும்....?
தொடர்வோம்.....

Thursday, March 5, 2009

இதயம் ஒரு கோவில் - அனாகதம்


இறைமயமும் ஒருமைனிலையும் ஒருங்கே அமைந்த முதல் மையம் சகஸ்ராரம். அங்கு பொறி புலன் ஒடுங்கி - சும்மா இருப்பதே சுகமெனு உயர் நிலையில் இருந்த நாம்- நம் இருப்பை உலகுக்கு அறிவிக்க ஒரு எண்ணம் பிறந்து நெற்றி எனும் ஆக்ஞாவில் சுயத்தை உணர்ந்தோம். எண்ணிய அந்த எண்ணத்தை மொழிக்கூறின் ஊடாக விசுக்தி எனும் தொண்டைகுழி வழியே பேசினோம். நாம் ஒன்றை பேசுவது அடுத்தவரை நோக்கியோ அல்ல்து சமுகத்தையாதாகவோ இருக்கும். பேசியவர் ஒருமை எனும் தன்னிலையிலும், கேட்பவர்கள் ஒருவராகவும், பலராகவும் இருக்ககூடும் என்பதால்,நம் கருத்துக்கு ஒப்புதலோ, எதிர்ப்போ எழுவது தவிர்க்க முடியாத கட்டாயம். இந்த மெய்மையை நாம் வாழ்வின் கணந்தோறும் அனுபவிக்கிறோம். அதற்கான எதிர்வினையை காட்டும் மையமாகத்தான் அனாகதம் என்கிற உணர்வு மையம் நமக்குள் இயங்கிக்கொண்டிருக்கிறது.

தன் நெற்றியில் பிறந்த ஒரு எண்ணத்தை ஒருவர் இப்படி அறிவித்தார்.
"நான் உங்கள் வீட்டுப் பிள்ளை..........."கையை நீட்டி உலகுக்கெல்லாம் காட்டி தன்னை - நல்லா கேட்டுக்கோங்க "நான் வேற யாருமில்ல...உங்க வீட்டு பிள்ளை....."-அப்படின்னாரு.
இதை ஒத்துக்கறவங்களும் இருப்பாங்க- மறுப்பவங்களும் இருப்பாங்க- எதிர்க்கறவங்க என்ன கேட்க முடியும்..?"அது எப்படி நீ எங்க வீட்டு பிள்ளை ஆக முடியும்,,?" அப்ப்டிங்கற கேள்வி வரற்துக்கு முன்னாலியே, அடுத்த வரி வரும்.."இது ஊரறிந்த உண்மை..." அடடா உங்களுக்கு இந்த உண்மை தெரியலன்னா நான் செய்யட்டுங்கிற மாதிரி எதிர்ப்பை எதிர்கொள்வதற்கு முன்னரே- தற்புரிதலுக்கான விடையையும் தந்திருப்பார்.
அவருக்கு சரி- நாம் ஒன்றைசொல்லி சமுகம் கேள்வி எழுப்பும்போது - விடையும் விளக்கமும் தரும்முன்னர் இந்த மையம் அதிரும், துடிக்கும்.."ஆ..நான் சொன்னதை யாரும் ஒப்புக்கலையே.."வெம்பும்.

அனாகதம் எங்கிருக்கிறது- நம் உடலில் கழுத்துக்கு கீழே - இதய்த்திற்கும், நுரையீரலுக்கும் நடுனாயகமாய் ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. இதயத்தின் வேலை உதிரத்தை நொடிதொறும் சுத்தம் செய்து உடல்முழுவதற்கும் அனுப்புவது. நுரையீரலின் வேலை -உடலின் காற்று வரவு செலவை மேற்பார்வையிட்டு மேலாண்மை செய்தல்.
இதயம் இயல்பாகவே துடித்துக்கொண்டிருக்கும். ஒரு ஆரோக்கியமான உடல் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்க வேண்டும், சுவாசம் எத்தனை முறை ஏறி இறங்கவேண்டும் என்றெல்லாம் முறையான கணக்கு உண்டு. இதெல்லாம் நமக்கு தெரியாமல் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளை எதிர்கொள்ள முடியாமல், ஒன்று இதய துடிப்பை கூட்டிக்கொண்டோ, அல்லது குறைத்துக்கொண்டோ துன்பப்படுகிறோம்.

நம் உடலின் ஆதார சக்கரங்களின் இயல்பு பற்றி இன்னொரு குறிப்பு தருகிறேன். எப்படி நெற்றி எண்ணியதை வாய் பேசியதோ - இந்த சங்கதியை இப்படி உணர் என இதய்த்துக்கு அறிவு சொல்லி இதயம் உணருமோ அதைப்போலவே, சமயங்களில் கீழிருக்கும் மையங்கள் நெற்றியை தங்களுக்கு ஏற்றமாதிரி நெற்றியை சிந்திக்க சொல்லும்.
கயிறு பாம்பாகி பயமுறுத்துவதும், பாம்பு கயிறாகி தூக்கி வீசப்படுவதும் இதனால்தான்.

இந்த மையத்தில் உதிர ஓட்டம் எப்படி தடையில்லாமல் நடக்கிறதோ இறந்துப்பட்ட செல்கள் ஒதுக்கப்பட்டு - நித்தமும் நவனவமாய் புது மூலக்கூறுகள் உருவாகிறதோ அதைப்போல நாம் பார்க்கும் நிகழ்வுகளின், கேட்கும் நிஜங்களின் வீர்யத்தையும், படிக்கும் விபரீதங்களையும், பார்த்து, கேட்டு, படித்து முடித்தவுடன் வெகு இயல்பாக அதை புது ஓட்டத்திற்குரிய சிந்தனை பாதையில் கொண்டு செலுத்த வேண்டும். இல்லையெனில் உணர்வு மையம் உங்களை அங்கிருந்து நகரவிடாது. நம் உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் தன் கட்டுக்குள் கொண்டுவந்துவிடும்.

ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து பயணம் செய்கிறோம்- சாலையில் ஒரு கொடூர விபத்து பார்க்கிறோம். எது எங்கே இருக்கிறதென்றே தெரியாத நிலை.எனென்ன வகையான விளைவுகள் நிகழ்கிறது கொஞ்சம் யோசித்து பாருங்கள். ஒருவரால் அடுத்த மூட்ரு நாளுக்கு சாப்பிட முடியவில்லை. அனாகதம் அந்த காட்சியை திரும்ப திரும்ப நெற்றியில் வைத்து பார்க்க வைத்து அதிலிருந்து மீல முடியாமல் ஆட்டுவிக்கிறது. இன்னொருவர் பார்த்ததுமே மயங்கிவிட்டார். அவரை மருத்துவமனைக்கு கொண்டுபோகவேண்டிய நிலை. இன்னொருவர் "ராங் சைடுல வந்திருக்காரு அதான் மாட்டிக்கிட்டாரு" தர்கரீதியாக சிந்திக்கிறார். ஒருவர் "சின்ன வயசு ஆளா "என்கிறார்.வயதை வைத்து மரணத்தை ஞாயப்படுத்திக்கொள்ளும் தனக்குதான் நீதிபதி இவர். இன்னொரு ஆசாமி இருக்காரு அவர் என்ன செய்வாரு தெரியுமா.."ஒரே தூக்கா தூக்கி இருக்கான்யா..ஒடம்பு சட்னி ஆயிருச்சி" என ரசிக்கிறார். இதைப்போல சொல்லிக்கொண்டே போகலாம்.

இதை நாம் பட்டியிலிட காரணம்- நாம் என்ன செய்வோம் என நினைத்து பார்ப்பதுதான். அனாகத மையத்திலேயே அதை சுமந்துகொண்டிருக்கப் போகிறோமா..? அல்லது "சரி. விதி வந்துச்சி நடந்துச்சி. பாவம் அந்த ஆன்மா சாந்தி அடையட்டும், அந்த குடும்பம் கஷ்டம் இல்லாம கரை ஏற வழி காட்டுடா ஆண்டவான்னு" அடுத்த நிகழ்வுக்கு தயாராகப்போகிறோமா..?

அனாகத மையத்தின் அடுத்த இயல்பு இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மாதிரி பாவித்தல்.ஆம் லாட்டரியில் கோடி விழுந்தால் இன்ப அதிர்ச்சியில் மாரடைப்பு. விழவில்லை எனில் துன்ப அதிர்ச்சியில் மாரடைப்பு. 
கிரிக்கெட்டில் கடைசி பந்தில் ஆறு ரன் அடித்தால் ஒருவர் சாகிறார். அடிக்காவிடில் இன்னொருவர் சாகிறார்.
அனாகத மையத்தை மிக சரியாக கையாள வேண்டும். நம் மனதின் ஒட்டுமொத்த உணர்வுகளின் கிடங்கு இது.கோபம்,எரிச்சல்,வெறுப்பு,அன்பு,கருணை,இன்னும் என்னென்ன உண்டோ அத்தனைக்கும் குத்தகைதாரர் இவர்தான். மனிதருக்கு வரும் சகல நோய்க்குமான அடித்தளம் இந்த மையத்தில்தான் இடப்படுகிறது. மனதுக்கும் சசுவாசத்துக்கும் நேரடி தொடர்பு இருப்பது போல், மனதுக்கும் இதயத்துக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. அதனால்தான் விழிப்பில்லா மனம் சட்டென அதிர்ச்சியில் உறைய இதயம் படபடவென துடிக்க துவங்குகிறது.

இதயம் வேகமாக துடித்தால் -சுவாசம் எகிறும்- சுவாசம் எகிறினால் மந்துக்கு அளவற்ற ஆக்சிஜன் போய் - என்ன செய்வது எந்த மையத்திற்கு ஆணையிடுவது என தெரியாமல்- வாய் குளறல்- ஒரு அதிர்வை கண்டதும் ஒரு சிலருக்கு வாந்தி, மயக்கம். இன்னும் சிலருக்கு சிறு நீர் தானாய் கழிதல், பெரும்பாலானோருக்கு மாரடைப்பு.ரத்த குழாய் வெடிப்பு.

பயப்படவேண்டாம். பின் இந்த மையத்தை எப்படித்தான் மேலாண்மை செய்வது..?
கத்தரை பாருங்கள். தூய நெஞ்சில் பேரொளி பிரகாசிப்பது தெரிகிறதா..?சீதையிடம் அனுமன் நெஞ்சை பிளந்து காடினானே- அதைப்போல- நன்கு உணரப்பட்ட இறைனிலையை அல்லது இயற்கை ஒழுங்குனிலையை அங்கு பதியன் போடுவதுதான். உணர்ச்சிகளின் கட்டுக்குள் சிக்கி விடாமல்- அறிவாலும், விழிப்புணர்வினாலும் நாம் இந்த மையத்தை மேய்க்க வேண்டும்.




மிக சரியாக நிர்வகிக்கப்படும் அனாகதத்தால் துன்பமில்லை - நோயுமில்லை- உணர்ச்சிவசப்படுதல் இல்லை.
எல்லாமே நம் கட்டுக்குள். கட்டாவிட்டால் தொடர்விளைவுகளை சந்திக்க அடுத்த மையம் தூண்டப்படும். எப்படி,,,?
மீண்டும் தொடர்வோம்.....











 

Wednesday, March 4, 2009

திருநீலகண்டர்தான்..எல்லோரும்.


இறை மையமான சகஸ்ராரம்-தொடர்ந்து நம் சுயம் துலங்கும் ஆக்ஞாவாகிய நெற்றிப்பொட்டு - இப்போது நாம் இறங்கி வந்திருக்கும் இடம் விசுக்தி.
பாம்பினைக்கொண்டு பார்கடலைக் கடைந்து கிடைத்த அமிர்தத்தை தேவர்கள் பருக,துணைப்பொருளாய் உருவான ஆலகால விஷத்தை சிவபெருமான் பருகினார். அந்த விஷம் உள்ளிறங்காமல் சக்தி தன் கைகளால் சிவனின் தொண்டையில் அழுத்த விஷத்தின் விஷத்தன்மைமுறிந்தது. அன்றிலிருந்து சிவன் திருனீலகண்டர் ஆனதாய் கதை ஒன்று உண்டு. கதையாக கேட்கும் வரைதான் இது கதை.

நம் உடலில் விசுக்தி என்று சொல்லப்படும் இந்த மையம் வெகு சிறப்புதன்மைகளைக்கொண்டது.நம் தொண்டை இங்குதான் உள்ளது.உந்தி கமலத்து காற்றை மேலுழுப்பி நாவை மேலன்னத்திலும்,கீழன்னத்திலும் தொட்டசைத்து 
மொழியாய் பேச அடுத்தவருக்கு கேட்கிறதே -அந்த ஓசையை எழுப்பும்- குரல்வளையும் இங்குதான் உள்ளது. நாக்கில் வைக்கப்பட்ட உணவானது சுவை அரும்புகளால் உணரப்பட்டு, பற்களால் அரைப்பட்டு விழுங்கியதும் உணவு பைக்கு போகிறது அல்லவா..?அந்த் கிடங்கிற்கு உணவை எடுத்து செல்லும் உணவு குழாயும் இந்த விசுக்தி மையத்தில்தான் உள்ளது. நாசியின் வழயாக சுவாசிக்கிறோமே, அந்த மூச்சுக்குழாயும் இந்த மையத்தில்தான் உள்ளது.ஆக விசுக்தியின் சங்கமத்தில் குரவளை,உணவுகுழாய்,மூச்சுகுழாய் என மூன்றும் அணிவகுத்து நிற்கிறது.

இந்த மையம் அடைப்பட்டால்- உணவு உள் போகாது-பேசமுடியாது- சுவாசிக்க முடியாது.வெளியே இருந்து வரும் உணவை உள்ளே அனுப்பவும், உள்ளேயிருந்து எச்சிலையோ ,சளியையோ வெளியே எடுக்கவுமென இந்த மையம் செய்யும் ஒவ்வொரு பணியும் விசித்திரமானவை. உணவும்,சுவாசமும்,பேசும் சொல்லும் இந்த மையத்தை கடக்க வேண்டும். அதனால்தான் நம் முன்னோர்கள் "கண்டம் கடத்தல்" என்றொரு பிரயோகத்தை கையாண்டார்கள். கண்டம் என்றால் ஆபத்து என ஒரு பொருள்கொண்டிருக்கிறோம். சாதாரண ஆபத்தல்ல. உயிருக்கு விளையும் ஆபத்தை கண்டம் என சொல்லி வருகிறோம். சிலர் எனக்கு தண்ணியில் கண்டம். எனக்கு பயணத்துல கண்டம் என சொல்வதுண்டு. 

உண்மையில் அதுவல்ல பொருள்- இறக்கும் தருவாயில் உள்ள ஒருவருக்கு அவர்தம் குடும்பத்தினர் வரிசையாய் தண்ணீர் ஊற்றுவார்கள். அப்படி ஊற்றுகையில் அது கண்டத்தை கடக்கவேண்டும்.அப்படி கடக்காமல் அது திரும்பிவிடுமானால் அவர் இறப்பை அடைகிறார். எத்தனை பேர் வாழ்வில் இதை பார்த்தாயிற்று.

சிவபெருமானுக்கு இருக்கும் அதே கண்டம்தான் நமக்கும் இருக்கிறது. இதில் ஒரு சந்தேகமும் வேண்டாம். சிவனுக்காவது விஷத்தை முறிக்க சக்தி தேவைப்பட்டாள். நமக்கு அதுவும் தேவை இல்லை.அனைத்தையும் நம் தொண்டையே பார்த்துக்கொள்கிறது. ஆம் நம் ஒவ்வொருவரின் தொண்டையும் விஷத்தை முறிக்கும் வல்லமையை இயற்கையிலேயே கொண்டுள்ளது. நாம் உண்ணும் அன்றாட உணவில் அமிர்த மயத்தோடே, விஷமும் இருக்கிறது. அதை தினமும் இந்த தொண்டைதான் முறித்துக்கொண்டிருக்கிறது. நாமும் திருனீல் கண்டர்கள்தான்.

இந்த மையம் மிக நடுனிலையானது. நீதி நேர்மை தவறாதது. விழுங்கும் கவள உணவில், முடியோ,கல்லோ,அல்லது ஒவ்வாத ஒன்றை - கிரிக்கெட் விளையாட்டை, சீரியல பார்த்தபடியே விழிப்பின்றி நாம் விழுங்கிவிடலாம். ஆனால் அய்யா 'தொண்டைமான் 'அவ்வளவு எளிதில் அதை உள்ளே விட்டுவிட மாட்டார். அந்த நொடிப்பொழுதில் ஆய்ந்துணர்வார், ஒவ்வாத ஏதேனும் இருக்குமெனில் அது உள்ளே போகாமல், உணர்த்தப்பட்டு "பாவி கல்லை விழுங்க பார்த்தியே"என்று மென்மையாய் கடிந்து அதை வெளியே துப்பும், குமட்டுகிற மாதிரி பாவிக்கும். தொலைக்காட்சியில் ஆழ்ந்த நாம் சுயத்துக்கு வந்து, கருத்தாய் அந்த் துணுக்கை எடுத்துப்போட்டுவிட்டு, மீண்டும் தொலைகாட்சியில் ஆள்வோம்.

தவிர்க்கமுடியாமல் பொய் சொல்ல வேண்டிய சூழ்னிலை வரும்போது இந்த மைய்த்துக்குரிய நம் 'தொண்டைமான்' அவர்கள் படும்பாடு சொல்லி மாளாது. காரணம் எண்ணம் ஏதும் அற்ற சகஸ்ராரத்திலிருந்து வாழ்வின் நிமித்தம் நாம் நெற்றியிலிருந்து சிந்தித்த ஏதோ ஒரு எண்ணத்தை, மூலாதாரத்திலிருந்து பெற்ப்பட்ட சக்தியின் உதவியோடு வாய்வழியாய் பேசுவது இந்த விசுக்தியினால்தான். இயல்பாகவே நம் உடல் தூய்மையின் இருப்பிடமாய் திகழ்கிறது. இதை பெரும்பாலும் நாம் புரிந்து கொள்வதில்லை. அதனால்தான் தன் முதலாளிக்காக பொய் சொல்ல வேண்டிய சூழ்னிலையில், அதை செய்துவிட்டு, அதற்கான சுய பரிகாரமாய், தொண்டை எச்சில்கூட்டி விழுங்கி தன் பொய்மையை விழுங்கும். இதயம் ஒரு கணம் அதிரும்..'ஆ..நம்மாளு பொய் சொல்லிட்டாரா.." வயிற்றில் ஒரு பந்து உருளும். இப்படி எல்லா மையங்களுமே ஒரு அதிர்வுக்குள்ளாக, மனம் அதை ஞாயப்படுத்தும். பிறகே உடலில் சகஜ நிலை வரும். நம் உடலும்,மனமும்,உயிரும் சாதாரணமான விஷயங்கள் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

எண்ணமாக இருக்கும் வரை அது வேறு யாருக்கும் தெரியப்போவதில்லை. பேசிவிட்டாலோ..அதற்கு பின் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் நமக்கு எஜமானர்களாகிவிடுவார்கள். பேசிய பேச்சுக்கு நாம் பொறுப்பேற்கவேண்டிய கட்டாயம் உண்டாகிவிடும். அதனால்தான் விசுக்தி மையத்தை நாம் நடுனிலை மையம்,நீதி மையம். உடலின் சோதனை சாவடி என்றெல்லாம் அழைக்கிறோம்.

நம் முன்னோர்கள் தோளில் துண்டு அணிவதை பார்த்திருக்கிறீர்களா..? ஆமா பெரியமனுஷனாட்டம் கழுத்துல ஒரு துண்டு என கேலி பேசுவதை கேட்டிருப்பீர்கள். உண்மையில் இந்த துண்டு அணிதல் என்பது ஒவ்வொரு மனிதரிடமும் இருக்கும் நடுனிலை தன்மையை வெளிப்படுத்தும் ஒரு அடையாளமாகும். பெரியவர்கள் அந்த துண்டை வலது பக்கத்திற்கும், இடது பக்கத்திற்கும் சமமாக இருக்குமாறு அணிவார்கள். இதன் அர்த்தம் நான் எந்த பககமும் சாய மாட்டேன். உண்மையின் பக்கமே இருப்பேன் என்பதன் வெளிப்பாடே.இப்போது நம் அரசியல்வாதிகள் மட்டும்தான் துண்டு அணிகிறார்கள். கழுத்தில் சமனிலையாய் சுற்றாமல், ஒரே பக்கமாக அரையும் குறையுமாக தொங்கும். அப்புறம் அவர்களிடம் நாம் எப்படி நடுனிலை தன்மையை எதிர்பார்க்கமுடியும்..?

நம் விசுக்தியில் உணவிலிருக்கும் விஷம் மட்டுமல்ல- கருத்து பொருள் மூலம் நுழைய பார்க்கும் விஷமும் முறியவேண்டும். நடுனிலை உணரப்படவேண்டும்.
நாம் எண்ணிய எண்ணம் இறைனிலையிலிருந்து, அதன் சத்தியத்தின் பொருள் உணர்ந்த நிலையிலைருந்து எண்ணப்பட்டிருந்தால்.,நாம் பேசும் வார்த்தைகளால் யாருக்கும் எந்த தீங்கும் நேரப்போவதில்லை. மாறாக ஏதோ பேசினோம் என பேசினால், கேட்பவர்கள் எதிர்வினை காட்டுவார்கள். அதை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். நம் விழிப்பற்ற தன்மையால் ஏற்படும் முதல் விபத்து இங்கிருந்துதான் துவங்குகிறது. வாழ்கை போராட்டமாவது பேசுவதிலிருந்துதான். இதற்கு பிறகு நாம் அறிவு நிலையிலிருந்து விலகி, நடுனிலையிலிருந்து விலகி, அடுத்த உணர்வு மையமான அனாகத்திற்கு வந்து அனுபவிக்கும் வேதனைகள்....
அடுத்ததில் தொடருவோம்.....
 

Tuesday, March 3, 2009

ஆக்ஞா என்றோர் அதிசயம்


ஆக்ஞா என்றோர் அதிசயம்

காஞ்சிபுரம் நமக்கு தெரியும்- தென்னகத்தின் கோவில் நகரம். வரதராஜ பெருமாள் கோவிலைப்பற்றியும் அறிந்திருப்பீர்கள். அந்த கோவில் தொடர்பாக நடந்த ஒரு வழக்கு உங்களுக்கு நினைவிருக்கிறதா..? ஆம்..நம் கோவில்களில் பொதுவாக யானையை வைத்திருப்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்..? அப்படி ஒரு யானைக்காகத்தான் வழக்கு நடந்தது.

எதிலும் பேதம் பார்க்க தெரியாத நம் முன்னோர்கள் அனைத்தையும் முறைப்படுத்தி செய்துவிட்டுப்போனார்கள். நம் தொடர்ச்சியில் அது தொய்ந்துவிட்டது.  யானையின் நெற்றியில் வடகலை நாமம் போடுவதா..? தென்கலை நாமம் போடுவதா..? இதுதான் வழக்கு. பார்த்தாரு நீதிபதி விவகாரமான பிரச்சினைதான்-ஆனாலும் தீர்ப்பு தந்தாகணும் "வருஷத்துல வடகலை நாமம் 6 மாதம், தென்கலை நாமம் 6 மாதம்" என்றார். இன்றுவரை நடைமுறையில் இருக்கிறது.சிவாலய யானைக்ளுக்கு எந்த பிரச்சினையுமில்லை, நிம்மதியாக பட்டை போட்டுவிடுகிறோம். யானைகளின் ஆக்ஞாவாகிய நெற்றிக்கே இந்த பாடென்றால் நம் நெற்றியின் பாட்டை புரிந்து கொள்ளுங்கள்.

நமது நெற்றி பெருவெளியைத்தான் ஆக்ஞா என்கிறோம். அந்த மேடையில் பெண்கள் திலகமிட்டுக்கொள்கிறார்கள்.ஆண்கள் திருமண்ணை குழைத்து சைவர்களாக இருந்தால் குறுக்காக மூன்று கோடுகளை பட்டையாகவும், வைணவர்கள் நாமமாகவும் இட்டுக்கொள்கிறார்கள். அதிலும் பிரிவுண்டு மேற்சொன்ன மாதிரி வடகலை,தென்கலை,ஆரஞ்சு நிற சூரணத்தில் ஒரே கோடாக போட்டுக்கொள்ளுதல் என பல.
கிறிஸ்துவர்கள் இம்மாதிரி எதையும் நெற்றியில் இட்டுக்கொள்வதில்லை என்றாலும், அவர்கள் வணங்கிமுடித்ததும் கைகளால் இட்டுக்கொள்ளும் மானசீக சிலுவை நெற்றியில்தான் முடிக்கப்படுகிறது. இசுலாமியர்களும் எந்த சின்னத்தையும் அணிவதில்லை என்று சொன்னாலும், அவர்களின் தொழுகை முறையே, குனிந்து நிமிர்ந்து தம் நெற்றியை மண்ணில் வைத்து தூண்டல் ஏற்படுத்துவதேயாகும். தினமும் ஆறுவேளை தொழுகை நிமித்தம் அவர்தம் நெற்றியில் உருவாகும் கறுப்பான அடையாளம் அவர்களுக்கான கௌரவம் என்பதை யாராவது இசுலாமிய நண்பர்களிடம் விசாரித்து பார்த்தால் விளங்கும். மேல் நெற்றியில் ஒருவித கறுப்பு மையை அணியும் இசுலாமிய அன்பர்களும் உண்டு.
பிரம்மனை வணங்கும் ஒரு பிரிவினர்- சந்தனத்தை குழைத்து நெற்றியின் வலது இடது முனைகளில் முத்திரையாக இட்டுக்கொள்வார்கள். புத்தமதத்தை சார்ந்த ஒரு பிரிவினர் இப்படி தினமும் போட்டு அழித்துக்கொண்டிருக்காமல் நிரந்தரமாக மூங்கில் குச்சியால் சூடே வைத்துக்கொள்கிறார்கள். இப்படி மனித நெற்றி உலக முழுமையும் ஏதோ ஒரு விதத்தில் முக்கியத்துவ்ம் தரப்பட்டு கொண்டாடிவந்திருக்கிறது.

நாம் இதுவரை வேற்றுமைகளில் நம்மை அடையாளப்படுத்திக்கொள்வதையே மனமுவந்து செய்துவந்திருக்கிறோம். மனித நெற்றி அனைவருக்கும் பொதுமைப்படுத்தப்பட்ட ஒரு உண்மையாகும்.
இன்றும் நம் பள்ளீசெல்லும் குழந்தைகளும் சரி. பெரும் நிறுவனத்தில் வேலை செய்யும் அதிகாரிகளும் சரி, யோசிக்கும்போது நெற்றியில்தான் கை வைக்கிறார்கள். முடிவெடுக்க முடியாமல் நாம் திணறும் பொழுதுகளில் எல்லாம் முதலில் பாதிப்புக்கு உள்ளாவது நெற்றிதான்.

நெற்றி நம் ஜீவன் துலங்குமிடம். இப்படிகூட சொல்லலாம். ஒரு சின்ன கற்பனை - வலதுகாதின் வழியாக ஒரு கம்பியை இடது காது வழியாக வெளியேவருமாறு செருகுவோம். இதேபோல உச்சியிலிருந்து ஒரு கம்பி, நாசிவையாக உச்சிக்கு ஒரு கம்பி, இரண்டு கண்கள் வழியாக பிந்தலைக்கு இரு கம்பிகள் என செருகி பார்த்தால் இவை அனைத்தும் ஒரு கூடு புள்ளியில் அதிர்வோடு சந்திக்கின்றன . அந்த அதிர்வுபுள்ளிதான் ஆக்ஞா என்கிற நம் புருவ மத்தி. தியானம் செய்யும்போது இந்த புருவமத்திதான் கவனிக்கபடுகிறது.படத்தில் காட்டியபடி..நமக்கான உயிராற்றலும், உணர்வாற்றலும்,மன ஆற்றலும் சகஸ்ராரம் என்கிற எண்ணமற்ற ஒருமை புள்ளியிலிருந்து, logic, மற்றும் sensitiveஆக இயங்கும் வலதுமூளை, மற்றும் இடது மூளை வழியாக பிரிந்து, பின்னர் ஒரு எண்ணமாக அடுத்த நெற்றி மையத்தில் குறுக்காக வெட்டி இணைகிறது. மற்ற புள்ளிகளிலும் இதைப்போலவே பெருக்கல் பெருக்கலாக வெட்டி இணைகிறது.

இது எதற்காகவென்றால் - நேர்மறை எதிர்மறைகளுக்கிடையில் நம் வாழ்வு நடக்க வேண்டும் என்பதற்காக..
பல பில்லியன் வருடங்களாய் இந்த் உலகின் தோற்றத்துக்கான காரணம் அறியமுடியவேயில்லை. இன்னும் நாமும் தேடிக்கொண்டே இருக்கிறோம். வலது மூளை எரிகிற ஒன்றை பார்த்து இது நெருப்பு என அடையாளப்படுத்தும். இடது மூளை உடனே "ஆம் அது சுடும் "என்று சொல்லும். நடுமூளை இப்போது நெற்றியில் தீர்க்கமாக முடிவெடுக்கும். "அதை தொடக்கூடாதென்று"- இந்த முறையில்தான் கணப்பொழுதுகளில் இவ்வளவு படிநிலைகளுக்குள் இயங்கி நம் உயிராற்றல் வேலை செய்கிறது.ஆக நம் வாழ்விற்கான எல்லா தீர்மானங்களையும் எடுக்குமிடம் நம் நெற்றி என புரிகிறதா..? அதுதான் நம் முகவரி அட்டை. அங்கிருந்தபடிதான் நம் சுயம் வேலை செய்கிறது.

மேலாண்மை தத்துவத்தின்படி- இரண்டுபேர் சொல்கிற கருத்தை வாங்கி ஒருவர் முடிவெடுப்பதென்பது சிரமமான வேலை. நம் நெற்றி கால்காலமாய் இதைத்தான் செய்கிறது. அது சுறுசுறுப்பாய் செயல்பட வைக்க அதன் மீது தூணட்ல் ஏற்படுத்தவே திருனீரு பூசுதலும், நாமம் இடுதலும்,குங்குமம் இடுதலும்,தரையில் கொண்டு வைத்து தேய்ப்பதும். 
"மூலாதாரத்து மூண்டெழு கனலை 
காலாலெழுப்பி கருத்தறிவித்தே.."-என்று ஔவை சொல்லும் காலால் கருத்தறிவ்க்குமிடம் இந்த நெற்றியே.இங்குதான் நாம் எதையும் காட்சியாககூட பார்க்கிறோம்.அங்கு பளிச்சென ஒன்று தோன்றிவிட்டால் நாம் முடிவை எட்டிவிட்டவர்களாகிறோம். "விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து.." என்ற இடமும் நம் நெற்றியே.

இடகலை-பிங்கலை-சுழுமுனை என்கிறோம் அல்லவா அவற்றிலிருந்து- புறப்படும் மூன்று மெல்லிய நரம்புகள் இந்த நெற்றி மையத்தில்தான் இணைகின்றன. இது ஒரு சிலருக்கு மெல்லிய பச்சை நிறத்தில் நெற்றியிலேயே தெரியும். நீங்களும் பார்த்திருப்பீர்கள். அதி முக்கியம் வாய்ந்த அந்த நரம்புகளில் நேர்மறையான் தூண்டல்களை ஏற்படுத்தவும், அந்த நரம்புகளை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவுமே நெற்றி பரப்பில் 'சில்லென்ற "உணர்வை தந்து பரபரவென முடிவெடுத்தலில் ஓயாமல் இயங்கும் நெற்றிக்கு சந்தனம்,திருனீரு,வெங்கலசிலுவை,ஈரபூமியோடு உரசல் எல்லாமே. 

முன்னோர்கள் வெவ்வேறு விதங்களில் ஓரே மாதிர்யான உண்மையை கண்டிருக்கிறார்கள் என உணர்வதில் எந்த தவறும் இல்லை.

காலையில் குளித்து முடித்து-நெற்றியில் திருமண்-குங்குமம் இட்டுக்கொள்வது -அனுதினமும் நாம் நமக்குள் எடுத்துக்கொள்ளும் சத்தியப்பிரமாணம் அன்றி வேறில்லை. அது என்ன சத்தியப்பிரமாணம்.."இறைவா நான் இங்குதான் இருக்கிறேன். என் சுயம் ஒளிர்வதாக. இங்கிருந்து நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் உன் முடிவு.அது அன்பில் தோய்ந்து,ஒழுக்கத்தில் மிளிர்ந்து,விழிப்பில் நனைந்து - எனக்கும் இந்த உலகுக்கும் நன்மையை சேர்க்கட்டும்."என்பதுதான் அது. சர்வ நிச்சயமாக நெற்றியை தூண்டும்போது மட்டுமே இந்த் எண்ணம் தோன்றுவது அனுபவித்தவர்களுக்குமட்டுமே தெரியும். இனி நீங்கள் அன்புஅவித்தால் உங்களுக்கும் புரியும்.

அப்படி நெற்றி மையத்திலிருந்து முடிவெடுக்க தவறினால் என்ன நிகழ்ந்து விடும்..? முடிவெடுக்கும் பொறுப்பை அடுத்த மையம் ஏற்றுக்கொள்ளும். அது எம்மாதிரியான முடிவை எடுக்கும்..?
தொடர்ந்து சந்திப்போம்.....


 

வெறும் ஆட்டமல்ல கரகாட்டம்


சகஸ்ராரத்தைப் பற்றி பேசுகையில் கரகாட்டத்தைப் பற்றிப் பேசாமல்விட்டால் நம் ஆதி தமிழர்களுக்கும் அவர்தம் பொருண்மைகளுக்கும் அநீதி இழைத்தவர்களாகிவிடுவோம். தமிழரின் ஒவ்வொரு பழஙகலையும் சாதாரணமானதல்ல. வாழ்வியலின் நகரும் போக்கில் விளையாட்டாய் சொல்லிவைத்தது மட்டுமல்லாமல் அதை கண்முன்னேயும் நிகழ்த்தி காட்டியவர்கள்.

மனித வாழ்வின் தேடலில் உணவு,உறையுள்,உறவு போக மிஞ்சியதெல்லாம், அவனது உயிர்,உடல்,மனம் பற்றிய தேடல்களே என்றால் மிகையில்லை.அவ்வகையில் கரகம்,சிலம்பம்,கும்மி,கோலாட்டம் என அதன் வரிசையில் வருகிற எல்லாமே உடல்,உயிர்,மன தத்துவங்களை சொல்லவந்த பயிற்சி முறைகளே ஆகும்.

கரகாட்டத்தில் என்ன இருக்கிறது..?திருவிழாவின் போது, அதுவும் கிராமத்தில் மட்டும்தான் அதை பார்க்க முடிகிறது. அசிங்கமாக அறைகுறை ஆடையோடு, கொச்சையான இசையும் தாளமும் என முகம் சுழிப்பீர்கள். அதை நாம்தான் அப்படி ஆக்கிவிட்டோம். நம் பொழுதுபோக்குக்காக நாம் செய்த பாவம் அது.

நம் கலாச்சாரத்தில் கும்பம் எனும் சொல்லுக்கு அலாதியான இடம் உண்டு. பூரண்கும்ப மரியாதை என்பார்கள். கோவில் கும்பாபிஷேகம் என்பார்கள். கும்பிடுதல் எனும் வார்த்தையே ஏறக்குறைய கும்பத்தையே குறிப்பதாக கொண்டாலும் தவறில்லை. கும்பம் என்பதன் இன்னொரு அர்த்தம் முழுமை அல்லது நிறைவு என கொள்ளலாம். முழுமுதல் கடவுள் வினாயகரை பாருங்கள் கையில் அழகாக கும்பத்தை வைத்திருப்பார். வீட்டில் நடக்கும் எந்த விஷேத்திற்கும் கல்யாணம்.காதுகுத்து,புதுவீடு புகுதல்,எதுவானாலும் அப்பூஜையில் தவறாமல் இடம் பெறுவது இந்த கும்பம்தான்.

தமிழ்தொல்லுலகில் முழுமைக்கு அவ்வளவு முக்கியத்துவம்.எண்ணத்தில் முழுமை,செயலில் முழுமை,இன்னும் பார்வையில்,கேட்பதில், நடப்பதில்,படிப்பதில்,உறங்குவதில் என அனைத்திலுமே முழுமையான வெளிப்பாட்டை காணமுயல்வது தமிழ்தத்துவ உலகின் நோக்கம். அதன் இன்றியமையாமையை குறியீடாக எடுத்து சொல்லவே கரகாட்டம்.

கரகத்தின் அமைப்பு - ஒரு கும்பம் -அதனுள் அரிசி- அரிசி என்பது கிடைத்த உடலுக்கான வாழ்வாதாரம் - கொஞ்சம் நீர்- கொஞ்சம் மணல் - அதை மூடிவைத்த மாதிரி கவிழ்த்துவைக்கப்பட்ட தேங்காய்- தொங்கும் மாவிலைகள்- அதன் மீது பூ அலங்காரம்- உச்சியில் ஒரு கிளி பொம்மை. கரகம் தயாராகிவிட்டது. எடுத்துவைத்து ஆடும் முன் ..

இது நம்க்கு கிடைத்த உடலையும், உயிரையும், மனதையும் அதனை வைத்து நாம் வாழும் வாழ்கையையும் குறிக்கிறது. நம் வாழ்வை நம் தலையிலிருந்துதான் வாழ்கிறோம். நம் பிரதான தலைமை செயலகமே தலைதான்.”கொடுக்கிர தெய்வம் கூரையை பிச்சிக்கிட்டு கொடுக்கும்” என நம் நாட்டுப்புரங்களில் சொல்லும் சொலவடையை கேட்டிருப்பீர்கள். அந்த கூரை உண்மையில் நம் வீட்டு கூரையல்ல. தலை உச்சி..நம் சகஸ்ராரம். நாம் பிறந்தபோதே அது பிய்க்கப்பட்டு கொடுக்க வேண்டியது கொடுக்கப்பட்டுவிட்டது. தரப்பட்டதை எப்படி வைத்துக்கொள்வது என்பதுதான் பிரச்சினை.

கிளிகளை நீங்கள் பார்த்திருக்ககூடும். தனியாக வரும். ஏதோ ஒரு மரத்தில் அமரும். கனிகளை கொத்தும். தனக்கு ஏதேனும் இடைஞ்சல் வருவதாய் தெரிந்தால் சிறகுகளை விரித்துவிடும். நம்க்கும் நம் தலையில் ஒரு கிளி இருக்கிறது. அதுதான் நம் உயிர் கிளி. அதுவாக பறந்துபோக நாம் விட்டுவிடக்கூடாது. “போ..போதும் பறந்துபோ “என சொல்லி வழியனுப்பி வைக்க வேண்டும். இல்லாவிட்டால்..”போனால் போகட்டும் போடா “என்றோ,”போகுதே..போகுதே என் பைங்கிளி வானிலே”-என சோக கீதம் இசைத்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

நம் உடலுக்குள் வாழ்வந்த் அக்கிளியை ஆராதித்து, உரிய மரியாதை அளித்து வரவேண்டிய பயிற்சிக்குரியதே கரகாட்டம்.
“உள்ளம் பெருங்கோவில் 
ஊனுடம்பு ஆலயம்..”என்கிற வார்த்தையெல்லாம் ஏதோ மேம்போக்கிற்காக சொல்லப்பட்டவை அல்ல.

தாயின் கருவறையிலிருந்து என்று நாம் ஜனித்தோமோ அன்றே நம் தலையின் மீது நமக்கான கரகம் ஏற்றப்பட்டுவிட்டது. நாம் வாழ்கிற வாழ்கைதான் ஆட்டம்.
கரகத்தை  தவறவிடுவோமா..? அல்லது..எந்த சூழல் வந்தாலும் சரி ,எழுந்தாலும்.விழுந்தாலும்,குனிந்தாலும்,பணிந்தாலும், நிமிர்ந்தாலும்,தவழ்ந்தாலும்,படுத்தாலும்,சாய்ந்தாலும், தலையே போனாலும் கரகம் விழாமல், இறை நமக்கு அளித்த அந்த முழுமையை உணர்ந்து , அதன் மூலம்- எண்ணத்தில்,செயலில்,என சகலத்திலும் முழு விழிப்போடு விளையாடி நாமாகவே கரகத்தை இறக்கி வைக்கப் போகிறோமா..?

கரகாட்டத்தை இன்னொரு முறை மனக்கண்ணில் நிறுத்தி பாருங்கள். நாம் எவ்வளவு வைழிப்போடு வாழவேண்டும் என்பதை சொல்லித் தரும்.

Saturday, February 28, 2009

உச்சந்தலையில் ஒரு வரைபடம்


உடலுக்குள் ஒரு நெடுஞ்சாலை கட்டுரையின் தொடர்ச்சியாய் இனிவரும் ஏழு கட்டுரைகளும் மலர்கிறது.
உயிர்வாழ்வின் ஆதாரமையங்களாய் செயல்படும் இந்த ஏழு யோகசக்கரங்களை பற்றி விரிவாக அலசுவதே இக்கட்டுரைகளின் நோக்கமாகும்.

இந்த முயறசியை- சகஸ்ராரம் தொடங்கி மூலாதாரம் வரையிலான இறங்கு பாதையிலும் அல்லது மூலாதாரம் தொடங்கி சகஸ்ராரம் வரையிலான ஏறுப்பாதையிலும் செய்யமுடியும். நான் இங்கு இறங்கு பாதையையே தெறிவு செய்கிறேன் அதற்கான காரணத்தை பின்னர் விளக்குவேன்.

சகஸ்ராரம்- சக்தி மையத்தின் உச்சிபுள்ளி. அதனால்தான் அதற்கு இடம் உச்சந்தலையில். அடிப்படையில் எனக்கொரு பார்வை உண்டு. இவ்வுலகில் மனிதத்திற்குதான் முக்கியத்துவம் தரப்பட வேண்டும். மதங்களும், மனித சக்திகளை ஏதோ ஒரு வகையில் துண்டாடும் எந்த ஒரு அம்சத்திற்குமே இரண்டாம் அல்லது மூன்றாம் இடமே. ஞானிகள் கண்ட ஒவ்வொரு தீர்க்கதரிசனங்களும் மனிதனுக்கானவையே தவிர மதங்களுக்கானவை அல்ல. அடுத்து, மதம் என்பது நம் தனி இருப்பை காட்டிக்கொள்ள விசாரத்தின் அடிப்படையில் நாம் எடுத்துக்கொண்ட அறிவின் முதலாளித்தனம் எனவும், விருப்புக்குட்பட்டு காரணமின்றியோ காரணத்தோடோ..சார்பு நிலையில் பிறக்கும் நேசம் எனவும் பார்க்கிறேன். மனித சக்திகளை ஒன்றிணைக்காத மதம் எனக்கு தேவை இல்லை.

பல்வேறு காரணங்களால் வேறுபட்டு திரியும் மனிதத்தை ஒரு குறிப்பிட்ட கட்டுக்குள் வைப்பதற்கான சான்றுகளை நிறுவுவதே என் பிறப்பின் பணியாய் தெரிகிறது. நான் இவ்வுலகை மூன்று அடிப்படைகளில் பார்க்கிறேன்.
1.உடல்+உயிர்+மனம் = மனிதன்
2.உடல்+உயிர்-மனம் = விலங்குகள், மரம் செடி கொடிகள்,புழு பூச்சியினங்கள்.(வரையரைக்குள்ளான மனம் கொண்டவை)
3.உடல்-உயிர்-மனம் = ஜடப்பொடருட்கள்.

மேற்சொன்ன மூன்று வாழ்வு குழுமங்களும்- அவை வாழ்வதற்குரிய ஏதுவை ஏற்படுத்தி தரும் பஞ்சபூத்ங்கள் தவிர்த்து வேறொன்றை இவ்வுலகில் புதிதாய் கொண்டுவர இயலுமா என்பது சாத்தியமற்றது. இன்னும் கொஞ்சம் வேடிக்கையாக சொன்னால், செல் போன் பயன்படுத்துகிறோம்.
அதை instrument என்கிறோம், அதாவது உடல். அது பயன்பாட்டுக்குள் இருக்க வேண்டுமானால் அதன் மின்கலம்(battery) மின்னூட்டம் தரப்பட்டிருக்க வேண்டும். அந்த பேட்டரிதான் உயிர்,உடல் உயிர் இருந்து விட்டால் போதாது. நமக்கான தனி பதிவை தரும் 'சிம்கார்ட்' என்பது நம் மனம்.
இந்த மூன்றும் இருந்துவிட்டால் செல்போனை பயன்படுத்த முடியுமா..? சேட்டிலைட் சிக்னல் வேண்டும்- அது இறைவ்னின் அருள். அருள் மட்டும் போதாது- நம் பதிவுக்கான நல்வினை இருப்பு என்கிற ரொக்க இருப்பு(balance)
இருந்தால் மட்டுமே செல்போன் பயன்பாடு சாத்தியம்.

இதில் எந்த ஒன்றில் குறை ஏற்படினும், செல்போன் ஜடப்பொருள் ஆகிவிடும். மனித வாழ்வும் இத்தகையதே. நாம் ஜடத்தன்மை ஏகிவிடக்கூடாது என்பது என் அவா. உலகில் பிறந்து வளர்ந்து, அறிவில் நிமிர்ந்து,மொழியாலும்,இனத்தாலும்,நிறத்தாலும்,கலாச்சாரத்தாலும், இன்னும் என்னென்ன பிரிவினைகளுக்குள் பிரிந்திருக்கும் மனிதர்களை இந்த உடல்+உயிர்+மனம் = மனிதன் என்கிற ஒருங்குறிக்குள் கொண்டுவந்துவிட முடியும் என நம்புகிறேன்.

சகஸ்ராரம் இந்தியாவில் பிறந்த இந்துக்களுக்கு மட்டுமா..? உலகில் உள்ள அத்தனை மனிதர்களூக்குமா எனும் கேள்வியை எழுப்புகையில் நம் ஆதி தமிழ் ஞானிகளின் தீர்க்கங்கள் அத்துனையும் உலகப்பொதுமை வாய்ந்தது என்பது நமக்கு புலப்படும்.

சகஸ்ராரத்தை இந்திய துணைக்கண்டத்தின் உச்சியில் இருக்கும் இமயத்தின் உச்சியில் இருக்கும் கயிலாய மலையாய் நமக்கு காட்டி வைத்தது - நம் சக்தியை உச்சிக்கு உயர்த்தவேண்டும் என்கிற குறியீடு என்பதாகவே நான் கருதுகிறேன்.

சரி சகஸ்ராரத்திற்கு வருவோம். எண் சாண் உடலுக்கு பிரதானமான சிரசில், தலையின் உச்சியில் இதற்கான இடம்.
குறிப்பாக எந்த இடம்..?தலை உச்சியில் கேசம் சுழித்துக்கொண்டு நிற்கிறதே அந்த இடம். 
ஒரு வரைபட தாளில் நான்கு அச்சுக்கோடுகளைப் போட்டால்., அவை ஒன்றை ஒன்று சந்திக்கும் புள்ளி உருவாகும் அல்லவா..? அப்படி ஒரு வரைகோட்டு புள்ளி நம் உச்சந்தலையில் இருக்கிறது. நாம் அதை பேசு வழக்கில் 'உச்சிக்குழி'என்று சொல்லி வருகிறோம். பிறந்த குழந்தைக்கு அது துடித்துக்கொண்டே இருக்கும். ஒரு குறிப்பிட்ட மாதங்களுக்கு பிறகு அதன் துடிப்பு நின்று போய்விடும்.இதன் சூட்சுமம் என்ன..? கருவில் இருக்கும் குழந்தை நிபந்தனைக்கு உட்பட்ட கால உச்சவரம்பில் 300 நாட்கள் தாயின் வயிற்றில் இருக்கும். குழந்தைக்காக அம்மா சாப்பிடுவாள், குழந்தைக்கு தேவையான அத்தனையும் அம்மாவிடமிருந்து தரப்படும். இது சார்பு வாழ்கை. கால நிர்ணயத்திற்கு பிறகு, இயற்கையின் உந்துதலோடு குழந்தை மண்ணுக்கு வந்ததும்,சார்பு வாழ்விலிருந்து, சுதந்திர வாழ்வுக்கு தயாராகிறது.

சார்பின் முடிவும்- சுதந்திரத்தின் துவக்கமும் நடந்தேறுவது எப்போது தெரியுமா..? தொப்புள்கொடி வெட்டப்படுகிறதல்லவா..?அப்போதுதான். வெட்டப்பட்ட தொப்புள் துளையின் வழியேதான் ஜீவன் என்கிற உயிர்காற்று முதன்முதலாய் உடலுக்குள் எடுத்து செல்லப்பட்டு நெற்றியில் வைக்கப்படுவதாக நம் முன்னோர்கள் அறிந்துள்ளனர்.
" உச்சிக்கு கீழே உள் நாக்குக்குமேலே
வச்ச பொருளின் வகை அறிவாரில்லை.." என பாடப்பட்டது அந்த் ஜீவன் குறித்துதான். அந்த முதல் காற்று உள்னுழைந்த அதிர்வில் குழந்தை காட்டும் எதிர்வினைதான் அழுகை. அப்படி குழந்தை அழாவிட்டால், சுற்றி இருக்கும் நாம் அனைவரும் அழவேண்டியிருக்கும்.
இந்த ஜீவனை நீங்கள் 'சிம் கார்ட்' என வைத்துக்கொண்டாலும் சரி, அல்லது 'ஹார்ட் டிஸ்க்' என வைத்துக்கொண்டாலும் சரி. பயன்பாட்டிற்காக இனி அவற்றை programme செய்யவேண்டும். எவ்வகையான மென்பொருளையும் பயன்படுத்த operating system install செய்யப்பட வேண்டும். அந்த OS தான் நம் மனமாகும். அந்த மனதை வடிவமைக்க இயற்கை செயல்படும் பாதையே நம் தலை உச்சியின் உச்சிகுழி. programme download ஆனதும், வாழ்வை எதிர்கொள்ள மனம் வடிவமைக்கப்பட்டதும் உச்சிகுழி 'சீல்' ஆகிவிடும்.

அந்த இறை துலங்கும் மேடையைத்தான் நாம் சகஸ்ராரம் எனும் பெயரில் அழைத்து வருகிறோம். மேலே எரிந்த பொருள் கீழே விழும் என்பது ஈர்ப்பு விதி. இது இங்கு நம் சக்திக்கும் பொருந்தும். மேலே இருந்து நமக்கு வரும் உயிராற்றல் எனும் சக்தி வெகு இயல்பாய் கீழே அடுத்த மையங்களுக்கு ஈர்க்கப்படுவது விதி. கீழே விட்டுவிடாமல் தூக்கிப்பிடித்து மேலேயே வைத்திருப்பது முயற்சி.விதியை மதியால் வெல்லுதல் என்பது இதுதான்.
சகஸ்ரார தளம் என்பது இறைதளம். அவ்விடத்தில் மனதை கட்டிப்போட்டு வைத்தால் நாமும் இறைத்த்ன்மையை பெறுகிறோம். கடவுள் உருவங்களில் அவர்களின் தலைக்கு பின்னால் தெரியும் ஒளிவட்டம் குறிப்பிடுவது சகஸ்ரார புள்ளியின் ஆளுமையையே ஆகும்.நாமும் அங்கிருந்தால் நமக்கும் ஒளிவட்டம் வாய்த்துவிடும்.

தெரிந்தோ தெரியாமலோ இந்த மையத்திற்கு நாம் அனைவருமே அதீத மரியாதை தந்து வந்திருக்கிறோம். உங்களுக்கு வியப்பாக இருக்கும்..,தலையில் இருக்கும் உச்சிகுடுமி, பூச்சூடுதல்,தலையில் அணியும் தொப்பி,பெண்கள் இட்டுக்கொள்ளும் முக்காடு,கோவிலில் நாம் பெறும் சடாரியின் ஆசீர்வாதம், துளசி தீர்த்தத்தை உசியில் தடவிக்கொள்ளும் பழக்கம்..இதெல்லாமே வழி வழயாக மனிதர்கள் இந்த புள்ளியின் செயல்பாட்டை புனிதப்படுத்த செய்யும் வழக்கங்கள் ஆகும்.

இன்னும் சொலப்போனால் நம் மனமே சுருள்வில் அலையாக உடலுக்குள்ளும் அல்லாமல்,வெளியேயும் அல்லாமல் இங்குதான் துலங்குகிறது. அது வாங்கியாக (receiver) செயல்படுகிறது. கோவில் கர்ப்பகிரக கோபுரத்தின் உச்சியிலிருக்கும் கலசம் போன்றது அந்த இடம்.

நம் மனம் துலங்கும் சகஸ்ரார மையத்தை ஒருமுறை தொட்டுப் பாருங்கள். ஒருவேளை சூடாக இருக்கலாம். கணினி சூடாகிவிட்டால் hang ஆகிவிடுமல்லவா..?அதைபோல நம் உச்சி தலையின் ரிசீவர் சூடாகிவிடாமல் இருக்கவே..அம்மாவும் பாட்டியும் வாரத்துக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க சொல்கிறார்கள். நம்மை யாராவது புகழ்ந்தால் உச்சி குளிர்ந்து போகிறோம்.

சகஸ்ராரம் என்பது எண்ணங்களற்ற அமைதி பெருவெளியில் நம்மை இருக்க வைப்பது. இறையின் இயற்கை பெருநிலையில் நம்மை லயப்படுத்திக்கொள்வது. அப்படி செய்யத் தவறினால் மனம் ஒரு மையம் கீழிறங்கி 'ஆக்ஞாவுக்கு' வந்துவிடும். நம் வாழ்கை துவங்கிவிடும். போராட்ட களத்தில் நாம் குதிப்பது அடுத்த மையத்தில். அதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

Friday, February 27, 2009

உடலுக்குள் ஒரு நெடுஞ்சாலை

தங்கநாற்கர திட்டமெல்லாம் நம் நாட்டில் மிக சமீபகாலமாக நடந்துகொண்டிருக்கும் சங்கதிகள். நம் உடலுக்குள்ளான திட்டமெல்லாம் ஏற்கனவே மிக அருமையாய் போடப்பட்டுவிட்டது.ஆனால் நாம்தான் இன்னும் அதில் முறையான பயணம் மேற்கொள்ளவில்லை என சொல்லலாம்.
நம் உடல் -சிவில்,மெகானிகல்,எலக்டிரிகல்,எலக்ட்ரானிக்ஸ், பயோ இன்னும் என்னென்ன பொறியியல் தத்துவங்கள் உண்டோ, அத்தனை பொறியாளர்களும் ஒன்றுகூடி உருவாக்கின மாதிரி அப்படியொரு டிசைன்.

நமக்கு தேவையான உயிராற்றல் அமிர்த தாரையாய் வானிலிருந்து வந்துகொண்டே இருக்கிறது. அது நம்முள் இறங்கி-நாம் எண்ணவும்-எண்ணியதை பேசவும்-பேசியதை செய்யவும்-பேசியதால்,செய்ததால் உண்டான விளைவுகளை எதிர்கொள்ளவும், ஆற்றலை ஒவ்வொரு கணமும் அனுப்பிக்கொண்டே இருக்கிறது. எது ஒன்று வெளியிலிருந்து வந்தாலும் அதற்கு முறையான பாதை தேவை.பாதையில்லா பயணம் துன்பத்தில் முடியும். இன்றைய நாட்களில் கூட நம் அன்றாட வாழ்வில்- உயிருக்கு துடிப்போரை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும்,அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கும் அவை தொய்வின்றி பயணிக்க எவ்வளவு நெரிசலான பாதையாக இருந்தாலும்..வழி ஏற்படுத்தி தரும் மனப்பாங்கை பெற்றிருக்கிறோம்.

உடலுக்குள்ளும் எந்த விதத்திலும் நெரிசல் ஏற்பட்டுவிடாத வண்ணம்..இயற்கை செய்து வைத்திருக்கும் அமைப்புகள் அனேகம். அது ஒரு அதிசயம் என்றால், அதை கண்டு சொன்ன முன்னோர்கள் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.ஆம் நம் உடலுக்குள்ளான நெடுஞ்சாலையை கண்டு சொன்னதோடு மட்டுமல்லாமல், அதை விரிவுபடுத்தி,நெறிபடுத்தி,பன்னெடும் நாட்கள் அக்கறையாய் தவமிருந்து,  அவற்றின் செயல்பாடுகளை உற்று நோக்கி, பிரமானங்களாய் நமக்கு உருவாக்கி தந்திருக்கிறார்கள்.


முதலில் சாலை எங்கிருந்து எதுவரை..?
உச்சந்தலையில் இருந்து - தொடையிரண்டும் சந்திக்கும் புள்ளிவரை.
கபாலத்தில் துவங்கி- முதுகு தண்டுவடத்தின் வழியாய் போட்ப்பட்டிருக்கிறது இந்த சாலை.
உயிரும் உடலும் இயங்க தேவையான அத்தனை சக்தியும் இதன் வழியேதான் உடலின் மற்ற பாகங்களுக்கு 
கிளை சாலைகளான நரம்பு,நாளம் வழியே பிரித்தனுப்படுகிறது.நாம் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறோம். நமக்கு வசதியான எல்லாமே நமக்கு இருக்குமாறு இயற்கை நம்மை வைத்திருக்கிறது. வெட்டாத நகம் நீண்டு வளர்ந்துகொண்டே இருக்கும். வெட்டாத முடியும் வளர்ந்துகொண்டே இருக்கும். ஆனால் நம் புருவங்களுக்கு மீதான முடிக்கற்றை, ஒரு நிலைக்கு மேல் ஐ.ஆர்.8 உரம் பட்டாலும் வளராது. காரணம் அதுதான் நமக்கான இசைவாய் இயற்கை தந்தது. ஒருவேளை தலைமுடி போல் புருவ முடியும் வளர துவங்கினால், நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது கடினம்தான். ஒரு வணக்கம் சொல்லக்கூட ரொம்ப சிரமப்பட வேண்டும். நகம் வளர்கிற மாதிரி நம் பற்கள் வளர்ந்தால் என்ன ஆகும்..?
காலையில் பல் தேய்ப்பதன் கூடவே- ஒரு ராவு பட்டையை வைத்து தினமும் அது வளராமல் தேய்க்க வேண்டியிருக்கும்.
உண்மையில் இந்த மாதிரியான சோதனைகளை நாம் பெறவில்லை. அதுதான் இறைவன் நம்மேல் வைத்திருக்கும் கருணை.

சாலை சரி அதில் பயணிப்பது யார்..?- சாட்சாத் நம் மூச்சு காற்றுதான். நம் ஒவ்வொருவருக்கான வெளி உலகத்தொடர்பை ஏற்படுத்தி தருவது சுவாசம்தான். உடல் இயங்க உயிர் ஒரு காரணி- உடல் வழியே உயிர் முறையாய் இயங்க மனம் ஒரு காரணி. மனம் இயங்க மூச்சே முக்கிய காரணி. "மூச்சடங்கிய நிலையில் மனதுக்கு ஓட்டமில்லை" என்பது பகவான் ரமணரின் கூற்று. ஆக நாசியின் வழியே நாம் உள்ளிழுக்கும் உயிர்வளி காற்றானது உச்சந்தலையிலிருந்து ,அடிவயிற்றின் மூலாதாரம் வரை தொடவேண்டும். அப்படி தொட்டு பயணிக்கவே இப்படி ஒரு நெடுஞ்சாலை

பயணபாதை விவரம்.
1.சகஸ்ராரம்
2.ஆக்ஞா
3.விசுக்தி
4.அனாகதம்
5.மணிபூரகம்
6.சுவாதிஷ்டானம்
7.மூலாதாரம்.

யோகவியல் வல்லுனர்கள் இதை ஆதார சக்கரம் என்கிறார்கள். சக்தி மையங்கள் என்கிறார்கள். இந்த ஒவ்வொரு புள்ளியும் ஒவொரு வகையான நாளமில்லா சுரப்பிகளை ஆதாரமாகக்கொண்டு இயங்கிவருகின்றன.

இம்மாதிரியான விஷயங்களை நான் கேள்விப்பட்டபோது உங்களைவிட மிகவும் சந்தேகப்பட்டேன்.தேடலும் அனுபவமும் குருவருளும், திருவருளும்தான் விடைகள் சொல்லின.
முதலில் இந்த மையங்களை உணர்ந்த நம் முன்னோர்கள் இதனை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதியது உண்மையா..? ஆம்..உணர்ந்ததோடு மட்டுமல்லாமல் அதை நாம் தொடர்ந்து நடைமுறைப்படுத்த எல்லா ஏற்பாடையும் செய்திருக்கிறார்கள் என்றால் மிகை இல்லை.



எத்தனையோ திருமணங்களுக்கு நாம் சென்றுள்ளோம், நம் இல்லங்களிலியே நடத்தியும் இருகிறோம், இப்போது நாம் காட்டும் பார்வை உங்களுக்கு வியப்பாககூட இருக்கும். மணப்பெண் அலங்காரத்தில் நகை அணிவித்தல் என்பது இன்றியமையாத ஒன்று. அந்த மணப்பெண்ணின் நகை அணிகளை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இன்றைய கட்டுரையின் தேவை நிறைவேறிவிடும்.

1.உச்சந்தலையில் அணிவது "பில்லை"- சகஸ்ராரத்திற்கான அணிகலன்.
2.அங்கிருந்து அதை இணைத்து- நெற்றியில் தொங்கவிடும் "நெற்றி சுட்டி"ஆக்ஞாவிற்கான அணிகலன்.
3.கழுத்தில் நெக்லெஸ் என ஒன்று அணியப்படுகிறதே, அது விசுக்திக்கான அணி.
4.சங்கிலியோடு- ஒரு பதக்கத்தை இணைத்து (chain+dollar) மார்புவரை அணிகிறோமே அது "அனாகதத்திற்கான அணீ.
5.மார்புக்கும் இடுப்புக்கும் இடையில் - அழுத்தி பிடித்தமாதிரி அணியப்படும் "ஒட்டியாணம்"-மணிபூரகத்துக்கான அணி.
6.இடையில் தளர்வாய் தொங்கவிட்டமாதிரி அணியும் "மேகலை"- சுவாதிஸ்டானத்திற்கான அணி.
7.முலாதாரத்திற்கான அணியை பிள்ளை பருவத்திலேயே போட்டு பார்த்துவிடுகிறோம்.

மனமும் எண்ணமும்- புத்தியும்,சித்தியும்-விழிப்போடு தொட்டு செல்லவேண்டிய இந்த புள்ளிகளில்தான் இப்படி தங்கத்தை பூட்டி பார்க்கும் பழக்க்ம்.இப்போது அதன் முக்கியம் புரிந்திருக்கும் அல்லவா..?

அந்த ஏழு புள்ளிகளில் அப்படி என்ன நடக்கிறது..?
யோகவியலாளர்கள் எண்ணற்ற விளக்கங்களை த்ருகிறார்கள். ஆனால் பரிட்ச்சார்த்தமாக எனக்கு தோன்றுவதை பகிர்கிறேன் (எதனோடும் முரண்படாமல்) 
சகஸ்ராரம் -எண்ணங்களற்ற இறைப்பெரு நிலை- சுகமாக சும்மா இருக்கும் இடம்.
ஆக்ஞா -நான் எனும் சுயம் அடையாளப்படும் இடம்
விசுக்தி- நான் எனது அடையாளத்தை எண்ணிய எண்ணத்தின் மூலம்- பேச்சாய்-மொழியாய் வெளிப்படுத்தும் மையம்.
அனாகதம்-நான் பேசியதை அன்னிய காதுகள் கேட்டன - அவர்கள் என் பேச்சிற்கு உடன்பட்டோ,முரண்பர்ட்டோ காட்டும் பிரதிபலிப்பை உணரும் மையம்.
மணிபூரகம்-வெளி உலகி பிரதிபலிப்பை கிடைத்த பிரசாதமாய் ஏற்று செரிக்கும் சுய ஏற்பு மையம்.
சுவாதிஷ்டானம்-செரிமானத்திற்கு பின் சக்கைகளை, சத்துகளை தனிதனியே பிரிக்கும் மையம்
மூலாதாரம்- ஒரு அனுபவத்திலிருந்து சக்தி பெற்று- அடுத்த செயலுக்கு ஊக்கம் பெறும் மையம்.

இவ்வுல வாழ்க்கையில் -பொருளையும் கருத்தையும் நாம் இப்படித்தான் உள்வாங்குகிறோம்.உணர்கிறோம்,செரிக்கிறோம், தன்வயமாக்குகிறோம்.,சக்தி பெறுகிறோம்.இறைக்கு அர்ப்பணிக்கிறோம்

இந்த பின்வரும் சொற்களை கொஞ்சம் கவனித்து பாருங்கள்- 
"நான் நானாவே இல்ல" "நெனச்சிகூட பார்க்க முடியல"
"என்னால விழுங்க முடியல..""(i can't gulf it)  ,"என்னால ஏத்துக்க முடியல"  "என்னால செரிக்க முடியல" 

நான் நானா இல்லன்னா -பைத்தியம்
நெனச்சிக்கூட பார்க்க முடியாத நிலை -குழப்பம்
விழுங்க முடியலன்னா- வாந்தி.
ஏத்துக்க முடியலன்னா- மாரடைப்பு.
செரிக்க முடியலன்னா -டைரியா - இதெல்லாம் வெளியே இருந்து வரும் நம் உடலுக்குள் வரும் பொருளுக்கானது மட்டுமல்ல - கருத்துக்களுக்கும் ஆனது.

பயணம் சுகமானால்-எந்த மையத்திலும் குழப்பமில்லை. இது குறித்து இன்னும் பேசுவோம் எதிர்வரும் நாளில்.